ஹதீஸ்கள்
#7278
ஸஹீஹ் முஸ்லிம் - Tribulations and Portents of the Last Hour
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரோம பைஸாந்தியர், அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய இடங்களில் நிலைகொள்ளாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களை நோக்கி மதீனாவிலிருந்து ஒரு படை புறப்படும். அன்றைய நாளில் பூமியில் வசிப்போரில் அவர்களே சிறந்தவர்களாயிருப்பர். அவர்கள் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள், எங்களுக்கும் எங்களில் சிறைக்கைதிகளாகப் பிடிக்கப் பட்டோருக்குமிடையே நாங்கள் போர் செய்ய எங்களை விட்டு விடுங்கள்" என்று கூறுவார்கள். அப்போது முஸ்லிம்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் சகோதரர்கள் மீது போர் தொடுக்க உங்களை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்" என்று சொல்வார்கள். ஆகவே, ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது முஸ்லிம்களில் மூன்றிலொரு பகுதியினர் தோற்று வெருண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். அவர்களில் மூன்றிலொரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த உயிர்த்தியாகிகளாவர்; மூன்றிலொரு பகுதியினர் (ரோமர்களை) வெற்றிகொள்வார்கள். அவர்கள் (அதன் பின்னர்) ஒருபோதும் சோதனைக்குள்ளாக்கப் படமாட்டார்கள். இவ்வாறு அவர்கள் கான்ஸ்டாண்டிநோபிளை வெற்றி கொள்வார்கள். அவர்கள் தம் வாட்களை ஆலிவ் மரங்களில் தொங்கவிட்டுப் போர்ச்செல்வங்களை பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது,அவர்களிடையே ஷைத்தான், "நீங்கள் புறப்பட்டு வந்த பின் உங்கள் குடும்பத்தாரிடையே மசீஹ் (தஜ்ஜால்) வந்துவிட்டான்" என்று குரலெழுப்புவான். உடனே அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் செல்வார்கள். ஆனால், அது பொய்யான செய்தியாயிருக்கும். அவர்கள் ஷாமுக்கு (சிரியா) வரும்போது "மசீஹ்" (தஜ்ஜால்) புறப்படுவான். இந்நிலையில் அவர்கள் போருக்காக ஆயத்தமாகி அணிகளைச் சீர் செய்து கொண்டிருக்கும்போது, தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும். அப்போது மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி வந்து அவர்களுக்குத் தலைமையேற்பார்கள். அவரை அல்லாஹ்வின் விரோதி (தஜ்ஜால்) காணும்போது, தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று கரைந்துபோவான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால்கூட அவன் தானாகக் கரைந்து அழிந்துவிடுவான். ஆயினும், ஈசாவின் கரத்தால் அவனை அல்லாஹ் அழிப்பான். அப்போது ஈசா (அலை) அவர்கள் தமது ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது இரத்தத்தை மக்களுக்குக் காட்டுவார்கள்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Tribulations and Portents of the Last Hour
- Hadith Index
- #7278
- Book Index
- 44
Grades
- -