ஹதீஸ்கள்
#6982
ஸஹீஹ் முஸ்லிம் - Repentance
மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "வியப்பூட்டும் இரு ஹதீஸ்களை உமக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் தெரிவித்த பின்வரும் ஹதீஸைச் சொன்னார்கள்: (முற்காலத்தில் பாவச்செயல்களால் ஒருவர்) தமக்குத்தாமே எல்லை மீறி நடந்தார். அவருக்கு மரண வேளை வந்தபோது, தம் புதல்வர்களிடம் இறுதி விருப்பம் தெரிவித்தார். "நான் இறந்து விட்டால் என்னை எரித்துத் தூளாக்கி,பிறகு கடலில் காற்றில் தூற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! என்மீது என் இறைவனுக்குச் சக்தியேற்பட்டால் எவரையும் வேதனை செய்யாத அளவுக்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் நிச்சயமாக அளிப்பான்" என்று கூறினார். அவ்வாறே (அவர் இறந்ததும் அவருடைய) புதல்வர்கள் செய்தனர். பிறகு அல்லாஹ், பூமியை நோக்கி, "நீ எடுத்ததை (ஒன்றுசேர்த்து)க் கொடுத்துவிடு" என்று கட்டளையிட்டான். அப்போது அந்த மனிதர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு வடிவில்) நின்றார். அவரிடம் அல்லாஹ், "நீ இப்படிச் செய்ய என்ன காரணம்?" என்று கேட்டான். அந்த மனிதர், "என் இறைவா! உன் மீதுள்ள அச்சம்தான் (காரணம்)" என்று பதிலளித்தார். இவ்வாறு அவர் கூறியதால் அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கினான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேலும் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் இன்னொரு ஹதீஸையும் கூறினார்கள். அது வருமாறு: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பூனையை, அது சாகும்வரை (பட்டினி போட்டு) கட்டிவைத்த காரணத்தால் ஒரு பெண் நரகத்தில் நுழைந்தாள். அவளும் அதற்குத் தீனி போடவில்லை; பூமியின் புழு பூச்சிகளைத் தின்று பிழைத்துக்கொள்ளட்டும் என அதை அவள் அவிழ்த்துவிடவுமில்லை. முடிவில் அது மெலிந்து போய் செத்துவிட்டது. ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எந்த மனிதரும் (இறையருளை) முழுவதுமாக நம்பி (நல்லறங்கள் செய்யாமல்) இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும், எந்த மனிதரும் (இறையருள்மீது) அவநம்பிக்கை கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்தத் தகவல் கூறப்படுகிறது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Repentance
- Hadith Index
- #6982
- Book Index
- 29
Grades
- -