ஹதீஸ்கள்
#6915
ஸஹீஹ் முஸ்லிம் - Pertaining to the Remembrance of Allah, Supplication, Repentance and Seeking Forgiveness
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை நபி (ஸல்) அவர்களிடம்) முறையிட்டார். அப்போது போர்க் கைதிக(ளான அடிமைக)ள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். ஆகவே, (தம் பணிகளில் தமக்கு உதவ அடிமையொருவரைக் கேட்பதற்காக) நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணமுடியவில்லை. (எனவே,) ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, (தாம் வந்த நோக்கத்தை)த் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்த விவரத்தைத் தெரிவிக்கவே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்படியே இருங்கள்" என்று கூறிவிட்டு, எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். எனது நெஞ்சின் மீது அவர்களது பாதம் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணர்ந்தேன் (அந்த அளவுக்கு அவர்கள் எங்களிடையே நெருக்கமாக அமர்ந்தார்கள்). பிறகு அவர்கள், "நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, முப்பத்து நான்கு முறை "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "அல்ஹம்து லில்லாஹ்" (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும் சொல்லுங்கள். அது உங்கள் இருவருக்கும் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நீங்கள் இருவரும் இரவில் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது..." என்று இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது: அலீ (ரலி) அவர்கள், "இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய நாளிலிருந்து அதை நான் ஓதாமல் விட்டதில்லை" என்று சொன்னார்கள். அப்போது "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூடவா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அலீ (ரலி) அவர்கள், "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூட ஓதாமல் இருந்ததில்லை" என்று பதிலளித்தார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான், ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூடவா?" என்று கேட்டேன் என அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pertaining to the Remembrance of Allah, Supplication, Repentance and Seeking Forgiveness
- Hadith Index
- #6915
- Book Index
- 108
Grades
- -