ஹதீஸ்கள்
#6572
ஸஹீஹ் முஸ்லிம் - Virtue, Enjoining Good Manners, and Joining of the Ties of Kinship
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்: என் அடியார்களே! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள். என் அடியார்களே! உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே. ஆகவே, என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள். உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன். என் அடியார்களே! உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே. ஆகவே, என்னிடமே உணவாதாரத்தைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கிறேன். என் அடியார்களே! உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணமானவர்களே. ஆகவே, என்னிடமே ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடையணிவிக்கிறேன். என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள். நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள். நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன். என் அடியார்களே! உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது; மேலும், உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது. என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை. என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை. என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; கடலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)! என் அடியார்களே! நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன். பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன். நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும். அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும்! (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சயீத் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் குத்சியை அறிவிக்கும்போது, (இந்த இறைச்செய்தியைக் கண்ணியப்படுத்துவதற்காக) முழந்தாளிட்டு நின்றுகொள்வார்கள். - அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் அபூமுஸ்ஹிர் (ரஹ்) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மர்வான் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களே அபூமுஸ்ஹிர் (ரஹ்) அவர்களைவிட ஹதீஸ் அறிவிப்பில் முழுமையானவர் ஆவார். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் அநீதியிழைப்பதை என்மீதும் தடை செய்துகொண்டேன். என் அடியார்கள் மீதும் தடைசெய்துவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள்" என்று வளமும் உயர்வும் மிக்க தம் இறைவனிடமிருந்து கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் அறிவித்த மேற்கண்ட ஹதீஸே இதைவிட முழுமையானதாகும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Virtue, Enjoining Good Manners, and Joining of the Ties of Kinship
- Hadith Index
- #6572
- Book Index
- 70
Grades
- -