ஹதீஸ்கள்
#6508
ஸஹீஹ் முஸ்லிம் - Virtue, Enjoining Good Manners, and Joining of the Ties of Kinship
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த நல்ல மனிதரான) ஜுரைஜ் என்பவர் தமது ஆசிரமத்தில் (இறைவனை) வழிபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அவருடைய தாயார் வந்(து அவரை அழைத்)தார். -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுரைஜை அவருடைய தாயார் அழைத்த முறையையும், அப்போது அவர் தமது புருவத்துக்கு மேலே கையை எப்படி வைத்திருந்தார்; பிறகு ஜுரைஜை நோக்கித் தமது தலையை உயர்த்தி எப்படி அழைத்தார் என்பதையும் சைகை செய்துகாட்டினார்கள். அதைப் போன்றே அபூஹுரைரா (ரலி) அவர்கள் சைகை செய்துகாட்ட, அறிவிப்பாளர் அபூ ராஃபிஉ (ரஹ்) அவர்கள் அவ்வாறே சைகை செய்து காட்டினார்கள் என ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும் போது விளக்கினார்கள்.- ஜுரைஜின் தாயார், "ஜுரைஜே! நான் உன்னுடைய தாய் (அழைக்கிறேன்); என்னிடம் பேசு" என்று கூறினார். அப்போது ஜுரைஜ் தொழுதுகொண்டிருப்பதைத் தாயார் கண்டார். உடனே ஜுரைஜ், "இறைவா! என் தாயா? என் தொழுகையா? (எதற்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்?)" என்று கூறிவிட்டு, தொழுகையையே தேர்ந்தெடுத்தார். உடனே அவருடைய தாயார் திரும்பிச் சென்றுவிட்டார். பிறகு மறுபடியும் அவரை அழைத்தார். "ஜுரைஜே! நான் உன் தாய் (அழைக்கிறேன்);என்னிடம் பேசு" என்று கூறினார். அப்போது(ம் தொழுது கொண்டிருந்த) ஜுரைஜ், "இறைவா! என் தாயா? எனது தொழுகையா?" என்று கூறிவிட்டு மீண்டும் தொழுகையையே தேர்ந்தெடுத்தார். அப்போது அவருடைய தாயார், "இறைவா! இதோ என் மகன் ஜுரைஜிடம் நான் பேசினேன். அவன் என்னிடம் பேச மறுத்துவிட்டான். இறைவா! விபசாரிகளை அவனுக்கு நீ காட்டாமல் அவனுக்கு (ஜுரைஜுக்கு) நீ மரணத்தைத் தந்துவிடாதே" என்று பிரார்த்தித்தார். (அந்நேரத்தில்) ஜுரைஜுக்கெதிராக அவருடைய தாயார், ஜுரைஜ் வேறு சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்று பிரார்த்திருந்தால், அவ்வாறே அவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருப்பார். (ஆனால், விபசாரிகளைக் கண்ணில் படவைக்கும் குறைந்தபட்ச சோதனையையே அவருடைய தாயார் வேண்டினார்.) ஆடு மேய்க்கும் இடையன் ஒருவன் ஜுரைஜின் ஆசிரமத்துக்கு வருவது வழக்கம். (இந்நிலையில் ஒரு நாள்) அந்தக் கிராமத்திலிருந்து (விபசாரியான) பெண்ணொருத்தி வந்தாள். அவளுடன் அந்த இடையன் விபசாரத்தில் ஈடுபட்டான். பிறகு அவள் கர்ப்பமுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அவளிடம் "இது யாருடைய குழந்தை?" என்று கேட்கப்பட்டது. "இதோ இந்த ஆசிரமத்தில் இருப்பவரால்தான் (இக்குழந்தை பிறந்தது)" என்று அவள் கூறினாள். உடனே மக்கள் (வெகுண்டெழுந்து) கோடரிகளையும் மண்வெட்டிகளையும் எடுத்துக்கொண்டு வந்து ஜுரைஜை அழைத்தனர். அப்போது அவர் தொழுதுகொண்டிருந்ததால் அவர்களிடம் அவர் பேசவில்லை. உடனே (கோபம் கொண்ட) அம்மக்கள் அவருடைய ஆசிரமத்தைத் தகர்க்கலாயினர். இதைக் கண்ட ஜுரைஜ் (தம் ஆசிரமத்திலிருந்து) இறங்கி வந்தார். மக்கள், "இதோ இவள் என்ன சொல்கிறாள் என்பதைக் கேள்" என்று கூறினர். ஜுரைஜ் புன்னகைத்துவிட்டு, அந்த (விபசாரியின்) குழந்தையின் தலையை தடவிக் கொடுத்தார். பிறகு "உன் தந்தை யார்?" என்று கேட்டார். (பேசும் பருவத்தை அடையாதிருந்த) அக்குழந்தை, "(இன்ன) ஆட்டிடையன்தான் என் தந்தை" என்று கூறியது. இதை அக்குழந்தையிடமிருந்து செவியுற்ற அம்மக்கள், (தமது தவறை உணர்ந்து) "நாங்கள் இடித்துத் தகர்த்த உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தாலும் வெள்ளியாலும் கட்டித்தருகிறோம்" என்று (ஜுரைஜிடம்) கூறினர். அதற்கு ஜுரைஜ் "இல்லை; முன்பிருந்ததைப் போன்று மீண்டும் மண்ணால் கட்டித்தாருங்கள் (அதுவே போதும்)" என்று கூறிவிட்டு,மேலே ஏறிச் சென்றுவிட்டார். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Virtue, Enjoining Good Manners, and Joining of the Ties of Kinship
- Hadith Index
- #6508
- Book Index
- 8
Grades
- -