ஹதீஸ்கள்
#6402
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், "அபூஹுரைரா(வின் நடவடிக்கை) உனக்கு வியப்பூட்டவில்லையா? (ஒரு நாள்) அவர் வந்து என் அறைக்கருகில் அமர்ந்து என் காதில் விழும் விதமாக நபிமொழிகளை அறிவித்துக்கொண்டிருந்தார். அப்போது நான் கூடுதல்தொழுகை (நஃபில்) தொழுதுகொண்டிருந்தேன். நான் தொழுது முடிப்பதற்குமுன் அவர் எழுந்து சென்றுவிட்டார். அவர் என்னிடம் சிக்கியிருந்தால், "நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஹதீஸ்களை அறிவித்துக்கொண்டிருப்பதைப் போன்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக (ஹதீஸ்களை) அறிவித்துக் கொண்டிருக்கவில்லை" என்று அவருக்கு மறுப்புத் தெரிவித்திருப்பேன்" என்று கூறினார்கள். - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "அபூஹுரைரா அதிகமான நபிமொழிகளை அறிவிக்கிறாரே!" என்று மக்கள் (குறை) கூறுகிறார்கள். (இந்தக் குற்றச்சாட்டு சரியா, தவறா என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு. "முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் என்ன நேர்ந்தது? அபூஹுரைராவைப் போன்று (அதிகமான) நபிமொழிகளை அவர்கள் அறிவிப்பதில்லையே!" என்றும் கேட்கிறார்கள். அது குறித்து அவர்களுக்கு விளக்கப்போகிறேன்: என் அன்சாரி சகோதரர்கள் தம் நிலபுலன்களில் (விவசாயத்தில்) கவனம் செலுத்தி வந்தார்கள். என் முஹாஜிர் சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்வதில் கவனம் செலுத்திவந்தார்கள். அதே நேரத்தில் நானோ, என் வயிற்றை நிரப்பும் (வருவாய் போதுமென்ற) திருப்தியுடன் (பொருள் சேர்க்கும் பணியில் ஈடுபடாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். மக்கள் (வருவாய் தேடி) வெளியே சென்றுவிடும்போதும் நான் அல்லாஹ்வின் தூதருடனேயே இருப்பேன்; அவர்கள் (நபிமொழிகளை) மறந்துவிடும்போது நான் (அவற்றை) நினைவில் வைத்திருப்பேன். ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யார் தமது ஆடையை விரித்து வைத்து, என்னுடைய இந்த உரையை வாங்கி, பிறகு தமது நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க்கொள்கிறாரோ அவர் (என்னிடமிருந்து) கேட்ட எதையும் மறக்கமாட்டார்" என்று கூறினார்கள். உடனே நான் என் மீதிருந்த போர்வையை விரித்(துப் பிடித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையை முடிக்கும்வரை அதை விரித்து வைத்திருந்துவிட்டு, பிறகு அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க்கொண்டேன். அன்றைய தினத்திற்குப் பிறகு அவர்கள் எனக்கு அறிவித்த செய்திகள் எதையும் நான் மறந்ததேயில்லை. அல்லாஹ் தனது வேதத்தில் அருளியுள்ள இரு வசனங்கள் மட்டும் இல்லாவிட்டால் நான் (நபிமொழிகளில்) எதையுமே ஒருபோதும் அறிவித்திருக்கமாட்டேன். (இவைதான் அந்தத் திரு வசனங்கள்:) "நாம் அருளிய சான்றுகளையும் நல்வழியையும் வேதத்தில் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்திய பிறகும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றனர். எனினும், பாவத்திலிருந்து மீண்டு, (தம்மைச்) சீர்திருத்தி, (தாம் மறைத்தவற்றைத்) தெளிவுபடுத்தியவர்களைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மிகவும் மன்னிப்பவனும் பெருங்கருணையாளனும் ஆவேன்". (2:159,160) - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அபூஹுரைரா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கின்றார் என்று நீங்கள் (குறை) கூறுகிறீர்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6402
- Book Index
- 233
Grades
- -