ஹதீஸ்கள்
#6315
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள், "உங்களால் இயன்றால் கடைத்தெருவுக்குள் நுழையும் முதல் ஆளாகவும் அதைவிட்டு வெளியேறும் இறுதி ஆளாகவும் இருக்காதீர்கள். ஏனெனில், கடைத்தெருவே ஷைத்தானின் போர்க்களமாகும். அங்குதான் ஷைத்தான் (முகாமிட்டு) தனது சேனையின் கொடியை நட்டுவைக்கிறான்" என்று கூறினார்கள். இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மேலும் (பின்வருமாறும்) எனக்குச் செய்தி எட்டியது: நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவி) உம்மு சலமா (ரலி) அவர்கள் இருந்தபோது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு எழுந்து (சென்று)விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் "இவர் யார் (தெரியுமா)?" என்றோ, அல்லது இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், "இவர் (தங்களுடைய தோழர்) திஹ்யா" என்று பதிலளித்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் ஏதும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டார்கள்.) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள், நாங்கள் பேசிக்கொண்ட விஷயம் குறித்து (மக்களிடையே) நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை அ(ப்போது வந்த)வர் திஹ்யா (ரலி) அவர்கள்தான் என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று நான் விளங்கிக்கொண்டேன்.) (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த) அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களிடம், "இந்த ஹதீஸைத் தாங்கள் யாரிடமிருந்து செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அவர்கள், "உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6315
- Book Index
- 145
Grades
- -