ஹதீஸ்கள்
#6305
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்துகொண்டு ஒவ்வொருவரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடிமறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) உரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர். முதலாவது பெண் கூறினார்: என் கணவர் (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும் அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால், (அந்த மலைப் பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை. இரண்டாவது பெண் கூறினார்: நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்றுகூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரது வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங்களைத்தான் கூற வேண்டியதிருக்கும். மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர். அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரது காதுக்கு எட்டி)னால் நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரைப் பற்றி எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடியாக வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.) நான்காவது பெண் கூறினார்: என் கணவர் (மக்கா உள்ளிட்ட) "திஹாமா" பகுதியின் இரவு நேரத்தைப் போன்றவர் (இதமானவர்). (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை; கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை; (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை. ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழைந்தால், சிறுத்தையாகிவிடுவார். வெளியே போனால் சிங்கமாகிவிடுவார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார். ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டுவிடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமல் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக்கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை. ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் "விவரமில்லாதவர்" அல்லது "ஆண்மையில்லாதவர்"; சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் உன்னை ஏசுவார். கேலி செய்தால்) உன் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) உன் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார். எட்டாவது பெண் கூறினார்: என் கணவர் முகர்வதற்கு மரிக்கொழுந்தைப் போன்று மணக்கக்கூடியவர்; தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர். ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்கு சமைத்துப் போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிறைத்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்திருப்பவர். பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வந்தர். எத்துணை பெரும் செல்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும்விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே இருக்கும். (விருந்தினர் வராத சில நாட்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முன்னிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால், தாம் அழிந்தோம் என அவை உறுதி செய்துகொள்ளும். பதினொன்றாவது பெண் (அவர்தான் உம்மு ஸர்உ) கூறினார்: என் கணவர் (பெயர்) அபூஸர்உ. அபூஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் புஜங்களைக் கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது "ஷிக்" எனுமிடத்தில்) சிறிய ஆட்டு மந்தையுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரது பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் (சுதந்திரமாகப்) பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப்பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரை தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவுக்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன். (என் கணவரின் தாயார்) "உம்மு அபீஸர்உ" எத்தகையவர் தெரியுமா? அவரது வீட்டுத் தானியக் களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும். அவரது வீடு விசாலமானதாகவே இருக்கும். (என் கணவரின் புதல்வர்) "இப்னு அபீ ஸர்உ" எத்தகையவர் தெரியுமா? அவரது படுக்கை உருவப்பட்ட கோரையைப் போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று மெல்லியதாக) இருக்கும். (கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் சப்பை (இறைச்சி) அவரது வயிறை நிறைத்துவிடும். (அந்த அளவுக்குக் குறைவாக உண்ணுபவர்.) (என் கணவரின் புதல்வி) பின்த் அபீஸர்உ எத்தகையவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல்வாகு கொண்ட) அவரது ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள். (என் கணவர்) அபூஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவர் தெரியுமா? அவள் எங்கள் (இரகசியச்) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருட்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பைகூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்பு மிக்கவள்; தூய்மை விரும்பி.) (ஒரு நாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) "அபூஸர்உ" வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரு குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் அவளது இடுப்புக்குக் கீழே (மடியில்) இருந்து இரு மாதுளங்கனிகளைத் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். ஆகவே, (அவளது கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை மணவிலக்குச் செய்துவிட்டு, அவளை மணமுடித்துக் கொண்டார். அவருக்குப் பின்னர் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாழ்க்கைப்பட்டேன். அவர் அதி விரைவாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) "கத்து" எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டியொன்றைப் பிடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது, ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டுவந்தார். ஒவ்வொரு கால்நடையிலிருந்தும் ஒரு ஜோடியை எனக்கு வழங்கினார். "(இவற்றை அறுத்து) உம்மு ஸர்உவே! (நன்றாக) நீயும் சாப்பிடு; உன் தாய் வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு" என்றார். (ஆனாலும்) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய அனைத்துப் பொருள்களையும் ஒன்றாய்க் குவித்தாலும், (என் முதல் கணவரான) அபூஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தின் அந்தஸ்தைக் கூட அவை எட்டா. (ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) (என்னருமைக் கணவரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "(ஆயிஷாவே!) உம்மு ஸர்வுக்கு அபூஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (சிறிதைக் கொடுத்தாலும் சிறப்பாகக் கொடுக்கும் அன்பான கணவராக) இருப்பேன்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், ஏழாவது பெண் "(என் கணவர்) ஆண்மையில்லாதவர்" என்று மட்டும் கூறியதாக இடம் பெற்றுள்ளது; (அல்லது விவரமில்லாதவர் எனும்) ஐயப்பாடு இடம்பெறவில்லை. (அபூஸர்உவின் புதல்வி குறித்து) "அவள் மேலாடை வெறுமையானவள்; (அவளுடைய கணவரின்) துணைவியரிலேயே மேலானவள்; அவளுடைய சக்களத்தியரை மலடியாக்கி விட்டாள்" என்று காணப்படுகிறது. (அபூஸர்உவின் பணிப்பெண் குறித்து) "அவள் (உணவுப் பொருட்களை) சேதப்படுத்துவ தில்லை" என்பதைக் குறிக்க ("வலா துனக்கிஸு" என்பதற்குப் பதிலாக) "வலா தன்குஸு மீரத்தனா தன்கீஸா" என்று காணப்படுகிறது. "(என் இரண்டாம் கணவர்) இறைச்சிக்காக அறுக்கப்படும் ஒவ்வொரு கால்நடையிலிருந்தும் ஒரு ஜோடியை எனக்கு வழங்கினார்" என்று "உம்மு ஸர்உ" கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6305
- Book Index
- 135
Grades
- -