ஹதீஸ்கள்
#6229
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: மர்வான் பின் ஹகம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் என்னை அழைத்து அலீ (ரலி) அவர்களை ஏசுமாறு உத்தரவிட்டார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். அவர் என்னிடம், "நீர் (இதற்கு உடன்படாமல்) மறுப்பதாயிருந்தால், "அல்லாஹ் அபுத் துராபை சபிக்கட்டும்! என்று கூறுவீராக" என்று சொன்னார். அதற்கு நான், "(தம் பெயர்களில்) "அபுத் துராப்" (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ (ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை; அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் பெரிதும் மகிழ்வார்கள்" என்று சொன்னேன். அதற்கு அந்த ஆளுநர், "அந்தக் கதையை எமக்குச் சொல்வீராக. ஏன் அபுத்துராப் என (அலீ) பெயர் சூட்டப்பெற்றார்?" என்று என்னிடம் கேட்டார். நான் பின்வருமாறு பதிலளித்தேன்: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்துக்கு வந்தார்கள். அப்போது (மருமகன்) அலீ அவர்கள் வீட்டில் இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள் "எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. ஆகவே,அவர் கோபித்துக்கொண்டு என்னிடம் மதிய ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டார்" என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "அவர் எங்கே என்று பார்" என்று சொன்னார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீயிடம் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் தமது மேனியிலிருந்து மேல்துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக்கொண்டே, "அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள்"என்று (இரண்டு முறை) கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6229
- Book Index
- 59
Grades
- -