ஹதீஸ்கள்
#6214
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் வீட்டில் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்) "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே இன்று (முழுவதும்) இருப்பேன்" என்று சொல்லிக்கொண்டேன். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பக்கம்தான் போனார்கள்" என்று கூறினர். நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற திசையில்) அவர்களைப் பின் தொடர்ந்து (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் ("குபா"வுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) "பிஃரு அரீசு"க்குச் சென்று அதன் தலை வாசலில் அமர்ந்தேன். அதன் கதவு பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். உடனே நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (எனும் அத்தோட்டத்திலுள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கணைக்கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விட்டபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்) "இன்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிற்காவலனாக இருப்பேன்" என்று சொல்லிக்கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து கதவைத் தள்ளினார்கள். நான் "யார் அது?" என்று கேட்டேன். அவர்கள், "(நான்தான்) அபூபக்ர் (வந்துள்ளேன்)" என்று பதிலளித்தார்கள். உடனே நான் "சற்றுப் பொறுங்கள்"என்று சொல்லிவிட்டு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இதோ அபூபக்ர் அவர்கள் (வந்து தங்களிடம் உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். நான் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம் "உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவிக்கிறார்கள்" என்று சொன்னேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே, தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டு, கணைக்கால்களைத் திறந்துகொண்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்துகொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டு என்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டுவிட்டு வந்திருந்தேன். ஆகவே (எனக்குள்), "அல்லாஹ் இன்ன மனிதருக்கு (அதாவது என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான்" என்று சொல்லிக்கொண்டேன். அப்போது ஒரு மனிதர் கதவை அசைக்கிறார். நான் "யார் அது?" என்று கேட்டேன். வந்தவர், "(நான்தான்) உமர் பின் அல்கத்தாப் (வந்துள்ளேன்)" என்று சொன்னார். நான் "சற்றுப் பொறுத்திருங்கள்" என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறி, "இதோ, உமர் அவர்கள் வந்து (தங்களிடம் உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்" என்று சொன்னேன். "அவருக்கு அனுமதி தாருங்கள்; அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறுங்கள்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்து விட்டார்கள்; நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்" என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச்சுவரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கம் அமர்ந்துகொண்டு தம் இரு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டுக்கொண்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்துகொண்டேன். "அல்லாஹ் இன்ன மனிதருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான்" என்று (முன்பு போலவே எனக்குள்) கூறிக்கொண்டேன். அப்போது ஒரு மனிதர் வந்து கதவை அசைத்தார். நான் "யார் அது?" என்று கேட்டேன். அவர், "(நான்தான்) உஸ்மான் பின் அஃப்பான் (வந்திருக்கிறேன்)" என்று பதிலளித்தார். அப்போது நான், "சற்றுப் பொறுங்கள்" என்று சொல்லிவிட்டு,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (உஸ்மான் (ரலி) அவர்கள் வந்திருக்கும்) செய்தியை அறிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு அனுமதிகொடுங்கள். அவர் சொர்க்கவாசி என்ற நற்செய்தியை அவரிடம் கூறுங்கள். அத்துடன் அவருக்குத் துன்பம் நேரவிருக்கிறது (என்ற செய்தியையும் சொல்லுங்கள்)" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) சென்று அவர்களிடம், "உள்ளே வாருங்கள். உங்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறுகிறார்கள். அத்துடன் உங்களுக்குத் துன்பம் நேரவிருக்கிறது என்ற செய்தியையும் சொன்னார்கள்" என்று கூறினேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்தபோது) சுற்றுச் சுவர் நிரம்பிவிட்டிருப்பதைக் கண்டார்கள். ஆகவே, மற்றொரு பக்கத்தில் அவர்கள் (மூவருக்கும்) எதிரே அமர்ந்துகொண்டார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும்) ஒரே சுவரில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த நிலையையும் உஸ்மான் (ரலி) அவர்கள் எதிர் சுவரில் தனியே அமர்ந்திருந்த நிலையையும் (தற்போது) அவர்களின் அடக்கத்தலங்கள் அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நாடி நான் புறப்பட்டேன். அவர்கள் தோட்டங்கள் உள்ள பகுதிக்குச் சென்றுள்ளதாக அறிந்தேன். அவர்களைப் பின்தொடர்ந்து சென்றதில், ஒரு தோட்டத்திற்குள் அவர்கள் சென்றிருப்பதைக் கண்டேன். அங்கு கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து, தம் கணைக்கால்களைத் திறந்து, கிணற்றுக்குள் தொங்க விட்டிருந்தார்கள்" என அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவர்களின் அடக்கத்தலங்கள் பற்றிய குறிப்பு அதில் இடம்பெறவில்லை. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் இந்த இடத்தில்தான் எனக்கு இதை அறிவித்தார்கள்" என்று கூறிவிட்டு, அங்கிருந்த கோட்டையின் ஓர் ஓரத்தைச் சுட்டிக்காட்டினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த ஒரு தோட்டத்துக்குத் தமது (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், "அவர்கள் மூவருடைய அடக்கத் தலங்கள் இந்த இடத்தில் ஒன்றாக இருப்பதையும் உஸ்மான் (ரலி) அவர்களின் அடக்கத் தலம் தனியாக (மற்றோர் இடத்தில்) அமைந்திருப்பதையும் குறிப்பதாக விளக்கம் கண்டேன்"எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6214
- Book Index
- 44
Grades
- -