ஹதீஸ்கள்
#6151
ஸஹீஹ் முஸ்லிம் - Virtues
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர் ஒருவர் (சந்தையில்) தமது சரக்கை எடுத்துக் காட்டியபோது, அவருக்குப் "பிடிக்காத" அல்லது "அவர் விரும்பாத" (குறைந்த) விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. (அறிவிப்பாளர் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் ஐயம்.) அப்போது அந்த யூதர், "மனிதர்கள் அனைவரையும்விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக! இல்லை (இந்த விலை கட்டுப்படியாகாது)" என்று கூறினார். இதை அன்சாரி (முஸ்லிம்)களில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே அந்த யூதரை முகத்தில் அறைந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக! என்றா நீ கூறுகிறாய்?" என்று கேட்டார். உடனே அந்த யூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அபுல்காசிமே! (சிறுபான்மை மக்களான எங்கள் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக எங்களிடம் நீங்கள் வாக்குறுதி அளித்திருக்கும் அடிப்படையில்) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். இன்ன மனிதர் எனது முகத்தில் அறைந்துவிட்டார்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமிடம்), "நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?" என்று கேட்டார்கள். "(அல்லாஹ்வின் தூதரே!), தாங்கள் எங்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கவே இவர் மனிதர்கள் அனைவரையும்விட மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!" என்று (மூசா (அலை) அவர்களைச் சிறப்பித்துக்) கூறினார்" என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக்கென்றால், கோபக்குறி அவர்களது முகத்தில் தென்பட்டது. பிறகு கூறினார்கள்: இறைத் தூதர்களுக்கிடையே ("ஒருவர் மற்றவரைவிடச் சிறந்தவர்" என்று) ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ("ஸூர்") ஊதப்படும். உடனே வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்துவிடுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு மற்றொரு முறை எக்காளம் ஊதப்படும். அப்போது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூசா (அலை) அவர்கள் இறை அரியணையைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் "தூர் சினாய்" (மலையில் இறைவனைச் சந்தித்த) நாளில் மூர்ச்சையாகி விழுந்தது கணக்கி லெடுக்கப்(பட்டு,அங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டுவிட்டாரா?" என்பது எனக்குத் தெரியாது. மேலும், யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களைவிட ஒருவர் சிறந்தவர் என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Virtues
- Hadith Index
- #6151
- Book Index
- 209
Grades
- -