ஹதீஸ்கள்
#6121
ஸஹீஹ் முஸ்லிம் - Virtues
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) சூரியன் (நடுவானிலிருந்து) சாய்ந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து மக்களுக்கு லுஹர் தொழுகை தொழுவித்தார்கள். (தொழுகை முடிந்து) சலாம் கொடுத்ததும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி யுக முடிவு நாள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அந்த நாளுக்கு முன்பாக பயங்கரமான சம்பவங்கள் பல நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். பிறகு "எதைப் பற்றியேனும் யாரேனும் என்னிடம் கேட்க விரும்பினால் அவர் என்னிடம் கேட்கலாம். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இடத்தில் நான் இருக்கும்வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்காமலிருக்கமாட்டேன்" என்றும் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு மக்கள் அதிகமாக அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கேளுங்கள் என்னிடம்" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, "என் தந்தை, யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உம்முடைய தந்தை ஹுதாஃபாதான்" என்று கூறிவிட்டு, "கேளுங்கள் என்னிடம்" எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்நிலையைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதர் எனவும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்" என்று கூறினார்கள். இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். பின்னர், "(நீங்கள் விரும்பாதவை நிகழும் நாள்) நெருங்கிவிட்டது. முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சற்று முன்னர் (நான் தொழுதுகொண்டிருந்தபோது) இந்தச் சுவரி(ன் திசையி)ல் எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று (வேறெந்த நாளிலும்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை" என்று சொன்னார்கள். உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் தம்மிடம் கூறியதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தை யார் என்று வினவியதால் அவருடைய) தாயார்,அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களிடம், "உன்னைவிட பெற்ற தாயைப் புண்படுத்திய ஒரு மகனைப் பற்றி ஒருபோதும் நான் கேள்விப்பட்டதேயில்லை. அறியாமைக் காலப்பெண்கள் செய்யும் பாவச்செயல்களில் ஒன்றை உன் தாயும் செய்திருக்க, அவளை நீ மக்கள்முன் அம்பலப்படுத்தினால் (அவளுக்கு அவமானம் ஏற்படாது என) நீ அச்சமற்று இருப்பாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஒரு கறுப்பு அடிமையுடன் இணைத்து (அவர்தான் உன் தந்தை என்று) கூறியிருந்தாலும் நிச்சயமாக அவரோடு என்னை நான் இணைத்துக்கொண்டிருப்பேன். (அவருடைய பிள்ளை என்று என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவே செய்வேன்)" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Virtues
- Hadith Index
- #6121
- Book Index
- 179
Grades
- -