ஹதீஸ்கள்
#6112
ஸஹீஹ் முஸ்லிம் - Virtues
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகள், தம் பேரீச்சந்தோப்புகளுக்கு நீர் பாய்ச்ச பயன்படுத்திவந்த "ஷிராஜுல் ஹர்ரா" எனும் கால்வாய் தொடர்பாக அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் தகராறு செய்தார். அந்த அன்சாரித் தோழர், "மடையைத் திறந்துவிடுங்கள்; தண்ணீர் பாயட்டும்!" என்று சொன்னார். ஸுபைர் (ரலி) அவர்கள், (மடையைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள். (இதையடுத்து) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களிடம், "ஸுபைரே! (உங்கள் தோப்புக்கு) நீர் பாய்ச்சிவிட்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்குத் தண்ணீரைத் திறந்துவிடுங்கள்" என்று சொன்னார்கள். உடனே அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, "அவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவர் முதலில் நீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு எனக்குத் திறந்துவிடும்படி அவருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?" என்று கேட்டார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. அவர்கள் (என் தந்தையிடம்), "ஸுபைரே! நீங்கள் உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சுங்கள். பிறகு வரப்புகள் எட்டும்வரை தண்ணீரை (மடை கட்டி)த் தேக்கி நிறுத்தி விடுங்கள்" என்று சொன்னார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! "உம்முடைய இறைவன் மீதாணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட வழக்கில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்குகின்ற தீர்ப்பால் தம் உள்ளங்களில் அவர்கள் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் (அதற்கு) முழுமையாகக் கட்டுப்படாத வரை நம்பிக்கை கொண்டவர்களாக ஆகமாட்டார்கள்" (4:65) எனும் இறைவசனம் இந்த விவகாரத்தில்தான் அருளப்பெற்றது என்று நான் எண்ணுகிறேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Virtues
- Hadith Index
- #6112
- Book Index
- 170
Grades
- -