ஹதீஸ்கள்
#5974
ஸஹீஹ் முஸ்லிம் - Virtues
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் ("அல்கவ்ஸர்" எனும் சிறப்புத்) தடாகம் குறித்துக் கூறுவதை நான் கேள்விப் பட்டுவந்தேன். ஆனால், அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எதையும் நான் செவியுறவில்லை. இந்நிலையில் ஒரு நாள் என் அடிமைப் பெண் எனக்குத் தலைவாரிக்கொண்டிருந்தாள். அப்போது (பள்ளிவாசலின் சொற்பொழிவு மேடையிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே!" என்று அழைத்தார்கள். உடனே நான் அந்த அடிமைப் பெண்ணிடம், " என்னைவிட்டு (சிறிது) விலகிக்கொள்" என்று சொன்னேன். அதற்கு அவள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களைத்தான் அழைத்தார்கள். பெண்களை அழைக்கவில்லை" என்று சொன்னாள். அதற்கு நான் "நானும் மக்களில் ஒருவரே" என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (எனது "அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தினருகில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அங்கு என்னிடம் வருவோருக்கு ஓர் எச்சரிக்கை! உங்களில் எவரும் வழி தவறிவந்த ஒட்டகம் விரட்டப்படுவதைப் போன்று (என்னை நெருங்கவிடாமல்) என்னிடமிருந்து விரட்டப்பட வேண்டாம். அப்போது நான், "ஏன் இவ்வாறு (விரட்டுகிறீர்கள்)?" என்று கேட்பேன். அதற்கு, "உங்களுக்குப் பின்னால் இவர்கள் புதிது புதிதாக (மார்க்கத்தில்) எதையெல்லாம் உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது" என்று சொல்லப்படும். அப்போது நான், "தொலையட்டும்! (அவர்கள்)" என்பேன். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் உம்மு சலமா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி "மக்களே!"என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது நான் தலைவாரிக்கொண்டிருந்தேன். உடனே நான் எனக்குத் தலைவாரிவிட்டுக்கொண்டிருந்த அடிமைப் பெண்ணிடம், தலை முடியைச் சேர்த்து (கொண்டை போட்டு)விடு என்று சொன்னேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Virtues
- Hadith Index
- #5974
- Book Index
- 35
Grades
- -