ஹதீஸ்கள்
#5819
ஸஹீஹ் முஸ்லிம் - Greetings
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரி நபித்தோழர்களில் ஒருவர் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்: ஒரு நாள் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (வானிலிருந்து) ஒரு நட்சத்திரம் எறியப்பட்டு ஒளிர்ந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் "இதைப் போன்று (வானிலிருந்து) நட்சத்திரம் எறியப்பட்டால், நீங்கள் அறியாமைக் காலத்தில் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள். (அறியாமைக் காலத்தில் இவ்வாறு நட்சத்திரம் எறியப்பட்டால்) இன்றிரவு ஒரு மாமனிதர் பிறந்திருக்கிறார்; ஒரு மாமனிதர் இறந்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்" என்று பதிலளித்தனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய பிறப்புக்காகவோ யாருடைய இறப்புக்காகவோ அது எறியப்படுவதில்லை. மாறாக, வளமும் புகழும் கொண்ட நம் இறைவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்துவிட்டால், அரியணையை (அர்ஷ்) சுமக்கும் வானவர்கள் இறைவனை(ப் போற்றி)த் துதிக்கின்றனர். பிறகு (அதைக் கேட்டு) அதற்கடுத்த வானிலுள்ள (வான)வர்களும் (இறைவனைப் போற்றித்) துதிக்கின்றனர். (இவ்வாறே ஒவ்வொரு வானிலுள்ள வானவர்கள் துதிக்கின்றனர்.) இறுதியில் அத்துதி பூமிக்கு அருகிலுள்ள வானவர்களை வந்தடைகிறது. பின்னர் அரியணையைச் சுமக்கும் வானவர்களுக்கு அருகிலிருப்பவர்கள், அரியணையைச் சுமக்கும் வானவர்களிடம், "உங்கள் இறைவன் என்ன சொன்னான்?" என்று வினவுகின்றனர். அதற்கு அரியணையைச் சுமக்கும் வானவர்கள் இறைவன் என்ன சொன்னான் என்பதை அவர்களிடம் தெரிவிக்கின்றனர். உடனே வானிலிருப்போரில் சிலர் வேறுசிலரிடம் அது குறித்து விசாரித்துக் கொள்கின்றனர். முடிவில் அச்செய்தி பூமிக்கு அருகிலுள்ள வானத்தை வந்தடைகிறது. உடனே அதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு, அதைத் தம் (சோதிட) நண்பர்களிடம் போடுகின்றனர். (அப்போது) அவர்கள்மீது நட்சத்திரங்கள் எறியப்படுகின்றன. உள்ளது உள்ளபடி சோதிடர்கள் தெரிவிப்பது உண்மையாகும். ஆயினும், அவர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) கூறுகின்றனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஆயினும், அவற்றில் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அன்சாரி நபித்தோழர்கள் சிலர் கூறினர் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. அவ்ஸாஈ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆயினும், சோதிடர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) அறிவிக்கின்றனர்" என்று இடம்பெற்றுள்ளது. யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆயினும், சோதிடர்கள் அதில் சேர்த்துக் கூடுதலாக அறிவிக்கின்றனர்" என்று காணப்படுகிறது. மேலும், அவர்களது அறிவிப்பில், "அ(வ்வான)வர்களது அச்சம் விலகியதும் அவர்கள் "உங்கள் இறைவன் என்ன சொன்னான்?" என்று கேட்கின்றனர். அதற்கு அவர்கள் "உண்மையே சொன்னான்" என்று பதிலளிக்கின்றனர் (34:23)" என்று இடம்பெற்றுள்ளது. மஅகில் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அவ்ஸாஈயின் அறிவிப்பில் உள்ளதைப் போன்றே "ஆயினும், சோதிடர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக அறிவிக்கின்றனர்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Greetings
- Hadith Index
- #5819
- Book Index
- 171
Grades
- -