ஹதீஸ்கள்
#5129
ஸஹீஹ் முஸ்லிம் - Drinks
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ருப் போரின்போது போர் செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று கிடைத்திருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அன்றைய தினத்தில் (தமது பொறுப்பில் வந்த) ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து வயதான மற்றோர் ஒட்டகத்தை எனக்கு வழங்கியிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி பாத்திமா(வை மணந்து) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பியபோது, "பனூ கைனுகா" குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரிடம், அவர் என்னுடன் வந்து "இத்கிர்" புல்லை நாங்கள் கொண்டுவருவோம் எனச் சொல்லியிருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியிருந்தேன். அதற்காக நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளையும், தீவனப் பைகள் மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரு ஒட்டகங்களும் அன்சாரீ ஒருவரது அறையின் அருகே படுக்கவைக்கப் பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது (திரும்பிவந்தேன். அப்போது) என் இரு ஒட்டகங்களின் திமில்களும் பிளக்கப்பட்டிருந்தன. அவற்றின் இடுப்புப் பகுதியும் பிளக்கப்பட்டு, அதன் ஈரக்குலைகள் வெளியே எடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் இந்த (அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. (அழுதுவிட்டேன்.) நான், "இதைச் செய்தவர் யார்?" என்று கேட்டேன். மக்கள், "ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப்’தாம் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழுவினருடன் இருக்கிறார். அவருக்காக அவருடைய நண்பர்களும் அடிமைப் பாடகி ஒருத்தியும் பாட்டுப் பாடுகின்றனர். அவள் தமது பாடலில் "ஹம்ஸா! இந்தக் கிழம் ஒட்டகங்களுக்கு (நீரே போதும்! ஒரு கை பார்ப்பீராக!)" என்று பாடினாள். உடனே வாளுடன் எழுந்த ஹம்ஸா, அவ்விரு ஒட்டகங்களின் திமில்களைப் பிளந்தார். அதன் இடுப்புப் பகுதியைப் பிளந்து, அவற்றின் ஈரக்குலைகளை வெளியே எடுத்துக்கொண்டார்" என்று பதிலளித்தனர். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் இருந்தார்கள். எனது முகத்தைப் பார்த்து நான் சந்தித்த (துயரத்)தை அறிந்துகொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று (நடந்ததைப்) போன்று (ஓர் அவலத்தை) நான் ஒருபோதும் கண்டதில்லை. ஹம்ஸா என் ஒட்டகங்களிடம் எல்லை மீறி நடந்துவிட்டார். அவற்றின் திமில்களை வெட்டித் துண்டாடிவிட்டார். அவற்றின் இடுப்பைப் பிளந்துவிட்டார். இதோ அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் குழுவினருடன் இருக்கிறார்" என்று சொன்னேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்துகொண்டு நடந்துசென்றார்கள். அவர்களை நானும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் பின்தொடர்ந்தோம். ஹம்ஸா இருந்த (வீட்டு)வாசல் வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உள்ளே செல்ல) அனுமதி கேட்டார்கள். அவர்கள் அனுமதி தந்தனர். அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கலானார்கள். அப்போது ஹம்ஸாவின் கண்கள் சிவந்திருந்தன. ஹம்ஸா (தலையை உயர்த்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தார். பிறகு தமது பார்வையைத் தாழ்த்தி அவர்களின் இரு முழங்கால் பகுதிகளைப் பார்த்தார். பிறகு மீண்டும் பார்வையை உயர்த்தி வயிற்றுப் பகுதியைப் பார்த்தார். பிறகு இன்னும் சற்று தலையை உயர்த்தி முகத்தைப் பார்த்தார். பிறகு, "நீங்களெல்லாம் என் தந்தையின் அடிமைகள்தாமே?" என்று கூறினார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல்) அப்படியே பின்வாக்கில் எட்டுவைத்து, வந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Drinks
- Hadith Index
- #5129
- Book Index
- 3
Grades
- -