ஹதீஸ்கள்
#5127
ஸஹீஹ் முஸ்லிம் - Drinks
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ருப் போரில் கிடைத்த செல்வங்களில் (எனது பங்காக) வயதான ஒட்டகம் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பெற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பொறுப்பில் வந்த ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து) வயதான மற்றோர் ஒட்டகத்தையும் எனக்கு வழங்கினார்கள். ஒரு நாள் நான் அவ்விரண்டு ஒட்டகங்களையும் அன்சாரி ஒருவரின் வீட்டுவாசலருகே படுக்கவைத்திருந்தேன். "இத்கிர்" எனும் புல்லை அவற்றின் மீது ஏற்றிச் சென்று, விற்க வேண்டுமென நான் நினைத்திருந்தேன். அப்போது "பனூ கைனுகா" குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவர் என்னுடன் (அதற்கு உதவியாக வர) இருந்தார். ஃபாத்திமா(வை மணம் புரிந்த) "வலீமா" விருந்துக்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் ஒட்டகத்தைப் படுக்கவைத்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (மது) அருந்திக்கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள் "ஹம்ஸா! கொழுத்த இந்தக் கிழம் ஒட்டகங்களுக்கு (நீரே போதும். ஒரு கை பார்ப்பீராக!)" என்று (யாப்பு வகைப் பாடலைப்) பாடினாள். உடனே ஹம்ஸா (ரலி) அவர்கள் வாளுடன் அவ்விரு ஒட்டகங்களை நோக்கிப் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டிச் சாய்த்தார்; அவற்றின் இடுப்பைப் பிளந்து, பின்னர் ஈரக்குலைகளை வெளியே எடுத்தார். - இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் எனக்கு இதை அறிவித்த இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் "திமில்களையுமா அவர் வெளியே எடுத்தார்?" என்று கேட்டேன். அதற்கு அவர் "ஆம்; அவற்றின் திமில்களையும் பிளந்து எடுத்துக்கொண்டே அவர் சென்றார்" என்று கூறினார்கள். (தொடர்ந்து அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னை அதிர்ச்சியடையச் செய்த அந்தக் காட்சியை கண்ட நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் நடந்ததைத் தெரிவித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன். ஹம்ஸா (ரலி) அவர்களிடம் சென்று தமது கோபத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அப்போது ஹம்ஸா தமது பார்வையை உயர்த்தி, "நீங்களெல்லாம் என் மூதாதையரின் அடிமைகள்தாமே?" என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஹம்ஸா போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு திரும்பாமல்) அப்படியே பின்வாக்கில் நடந்துவந்து அவர்களைவிட்டு வெளியேறிவிட்டார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Drinks
- Hadith Index
- #5127
- Book Index
- 1
Grades
- -