ஹதீஸ்கள்
#4935
ஸஹீஹ் முஸ்லிம் - Government
அனஸ் (ரலி) அவர்களின் சிற்றன்னை உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, எங்கள் வீட்டில் மதிய ஓய்வு மேற்கொண்டார்கள். பிறகு உறக்கத்திலிருந்து சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது நான், "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம்! ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் கடல் முதுகில் பயணிப்பவர்களாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களைப் போன்று இருந்தார்கள்" என்று கூறினார்கள். உடனே நான், "என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன். அதற்கு, "நீங்களும் அவர்களில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) உறங்கிவிட்டு மறுபடியும் சிரித்தபடியே விழித்தொழுந்தார்கள். அப்போது நான் (அதற்கான காரணத்தை) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள். அப்போதும் நான், "என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (கடல்வழிப்போரில் செல்லும்) முதலாவது குழுவினரில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டபோது, உபாதா (ரலி) அவர்கள் கடலில் பயணம் செய்து அறப்போருக்குச் சென்றார்கள். அப்போது தம்முடன் (தம் துணைவி) உம்மு ஹராம் (ரலி) அவர்களையும் (கப்பலில்) அழைத்துச் சென்றார்கள். (போர் முடிந்து) வந்தபோது, உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் கோவேறு கழுதையொன்று கொண்டுவரப்பட்டது. அதில் அவர்கள் ஏறியபோது, அது கீழே தள்ளிவிட்டது. அதனால் அவர்களது கழுத்து முறிந்துவிட்டது. (அவர்கள் இறந்துவிட்டார்கள்.) அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Government
- Hadith Index
- #4935
- Book Index
- 230
Grades
- -