ஹதீஸ்கள்
#4917
ஸஹீஹ் முஸ்லிம் - Government
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்களில் சிலர் (ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லஹ்யான் ஆகிய கூட்டத்தார்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்களுக்குக் குர்ஆனையும் "சுன்னா"வையும் கற்பிப்பதற்காக எங்களுடன் சிலரை அனுப்பிவையுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க அன்சாரிகளில் எழுபது பேரை அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) எனப்படுவர். அவர்களில் என் தாய்மாமா ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும் ஒருவர் ஆவார். அவர்கள் (எழுபது பேரும்) இரவில் குர்ஆனை ஓதுவார்கள்; ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் செய்வார்கள். பகல் நேரங்களில் (அருந்துவோருக்காகவும், அங்கத்தூய்மை செய்வோருக்காகவும்) தண்ணீர் கொண்டுவந்து (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைப்பார்கள். விறகு சேகரித்து வந்து அதை விற்றுக் காசாக்கி அதன் மூலம் திண்ணைவாசிகளுக்கும் ஏழைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் இவர்களை அனுப்பியபோது, அவர்கள் (குறிப்பிட்ட) அந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு முன்பே அவர்களை இடைமறித்து, ("பிஃரு மஊனா" எனும் இடத்தில்) அனைவரையும் அக்கூட்டத்தார் கொன்றுவிட்டனர். (இறக்கும் தருவாயில்) அவர்கள், "இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்துகொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய் என்று எங்களைப் பற்றி எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக!" என்று கூறினர். என் தாய்மாமா ஹராம் (ரலி) அவர்களுக்குப் பின்னால் ஒரு மனிதன் வந்து ஈட்டியால் குத்திவிட்டான். அது அவர்களை ஊடுருவிச் சென்றது. அப்போது ஹராம் (ரலி) அவர்கள், "கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்" என்று கூறினார்கள். (இறையறிவிப்பின் மூலம் இது குறித்து அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களிடம், "உங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் (இறக்கும் தருவாயில்) "இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்து கொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய்" என எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக என்று கூறினர்" எனத் தெரிவித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Government
- Hadith Index
- #4917
- Book Index
- 212
Grades
- -