ஹதீஸ்கள்
#4734
ஸஹீஹ் முஸ்லிம் - Government
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (போர்ச் செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் தண்டனை கொடியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன். இவ்வாறே, மறுமை நாளில் கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன். இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லி விட்டேன்" என்று கூறிவிடுவேன். இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஓர் உயிரினத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்யமுடியாது; உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன். இவ்வாறே, மறுமை நாளில் (காற்றில்) அசையும் துணிகளைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகி லேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன். இவ்வாறே, மறுமை நாளில் பொன்னையும் வெள்ளியையும் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில், அப்போது நான் "என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Government
- Hadith Index
- #4734
- Book Index
- 33
Grades
- -