ஹதீஸ்கள்
#4649
ஸஹீஹ் முஸ்லிம் - Jihad and Expeditions
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனுடைய நண்பர்களும் (அங்கு) அமர்ந்திருந்தனர். அதற்கு முந்தையநாள் (இறைச்சிக்காக மக்காவில்) ஓர் ஒட்டகம் அறுக்கப்பட்டிருந்தது. அபூஜஹ்ல், "உங்களில் யார், இன்ன குடும்பத்தார் (நேற்று) அறுத்த ஒட்டகத்தின் கருப்பையைச் சுற்றியுள்ள சவ்வுகளைக் கொண்டுவந்து முஹம்மத் (தொழுகையில்) சிரவணக்கத்திற்குச் செல்லும்போது, அவருடைய தோள்கள்மீது வைப்பவர்?" என்று கேட்டான். அங்கிருந்தவர்களில் மாபாதகன் ஒருவன் கிளம்பிச் சென்று, அதைக் கொண்டுவந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்தபோது, அவர்களுடைய தோள்களுக்கு மத்தியில் அதை(த் தூக்கி) வைத்தான். அதைக் கண்டு அவனுடைய சகாக்கள் ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரிக்கலாயினர். நான் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குச் சக்தி இருந்திருந்தால் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முதுகிலிருந்து அப்புறப்படுத்தியிருப்பேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கத்திலிருந்து தலையை உயர்த்தாமல் (அப்படியே) இருந்தார்கள். இதற்கிடையில், யாரோ ஒருவர் சென்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டார். உடனே சிறுமியாயிருந்த ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து அதை அப்புறப்படுத்தினார். பிறகு அ(ந்தக் கய)வர்களை நோக்கிச் சென்று அவர்களை ஏசினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் உரத்த குரலில் எதிரிகளுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். -பொதுவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தால் ஒவ்வொரு வாக்கியத்தையும் மூன்று முறை கூறுவார்கள்.- பிறகு "இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள்" என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள். நபியவர்களது குரலைக் கேட்டதும் எதிரிகளின் சிரிப்பு அடங்கிவிட்டது. அல்லாஹ்வுடைய தூதரின் பிரார்த்தனையைக் குறித்து அவர்கள் அஞ்சினர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உக்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் (ஏழாவதாக மற்றொருவரையும் குறிப்பிட்டார்கள். ஆனால், அது என் நினைவில் இல்லை.) ஆகியோரை நீயே கவனித்துக்கொள்" என்று பிரார்த்தித்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்தப் பிரார்த்தனையில்) பெயர் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் மாண்டு கிடந்ததை நான் கண்டேன். பின்னர் அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப்பட்டு, பத்ரிலிருந்த ஒரு பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டனர். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸில் வலீத் பின் உக்பாவின் பெயர் தவறுதலாகவே இடம்பெற்றுள்ளது. (வலீத் பின் உத்பா என்பதே சரி.) அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Jihad and Expeditions
- Hadith Index
- #4649
- Book Index
- 131
Grades
- -