ஹதீஸ்கள்
#4640
ஸஹீஹ் முஸ்லிம் - Jihad and Expeditions
யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்திருந்தால், அவர்களுடன் சேர்ந்து போர்களில் ஈடுபட்டிருப்பேன்; கடுமையாக உழைத்திருப்பேன்" என்று கூறினார். அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீ அவ்வாறு செய்திருக்கவாபோகிறாய்? அகழ்ப் போர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். கடுமையான காற்றும் குளிரும் எங்களை வாட்டிக்கொண்டிருந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். நாங்கள் மௌனமாக இருந்தோம். எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு மீண்டும் "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) நம்மிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அமைதியாக இருந்தோம். எங்களில் யாரும் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாவது முறையாக), "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) நம்மிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். எங்களில் யாரும் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹுதைஃபா! எதிரிகளைப் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவா" என்று கூறினார்கள். எனது பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் என்னை அழைத்துவிட்டதால் என்னால் மறுக்க முடியவில்லை. நான் எழுந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், " நீ சென்று எதிரிகளைப் பற்றிய செய்தியை (உள வறிந்து) என்னிடம் கொண்டுவா! எதிரிகளை எனக்கெதிராக விழிப்படையச் செய்துவிடாதே" என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து விடைபெற்று (எதிரிகளை நோக்கி)ச் சென்றபோது, நான் வெண்ணீரில் நடப்பதைப் போன்றிருந்தது (குளிரே எனக்குத் தெரிய வில்லை). இந்நிலையில் நான் எதிரிகளிடம் வந்துசேர்ந்தேன். அப்போது (எதிரிகளின் தலைவர்) அபூசுஃப்யான் தமது முதுகை நெருப்பில் காட்டி, குளிர் காய்ந்துகொண்டிருந்தார். நான் எனது வில்லின் நடுவே ஓர் அம்பைப் பொருத்தி அவர்மீது எய்யப்போனேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "எனக்கெதிராக எதிரிகளை விழிப்படையச் செய்துவிடாதே" என்று கூறியதை நான் நினைவுகூர்ந்தேன். அப்போது மட்டும் நான் அம்பை எய்திருந்தால், அவரை நிச்சயமாக நான் தாக்கியிருப்பேன். பிறகு நான் வெண்ணீரில் நடப்பதைப் போன்றே, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) திரும்பி வந்தேன். அவர்களிடம் சென்று எதிரிகளைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தேன். நான் செய்திகளைச் சொல்லி முடித்ததும் குளிர் என்னைத் தாக்கத் தொடங்கியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மீது இருந்த போர்வையின் ஒரு கூடுதலான பகுதியை எனக்கு அணி வித்தார்கள். அந்தப் போர்வையைப் போர்த்திக்கொண்டுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அப்போது) தொழுது கொண்டிருந்தார்கள். அதிகாலைவரை நான் (அப்போர்வையில்) உறங்கிக்கொண்டேயிருந்தேன். அதிகாலையானதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தூங்கு மூஞ்சி! எழுந்திரு" என்றார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Jihad and Expeditions
- Hadith Index
- #4640
- Book Index
- 122
Grades
- -