ஹதீஸ்கள்
#4603
ஸஹீஹ் முஸ்லிம் - Jihad and Expeditions
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹாஜிர்கள் (மக்கா முஸ்லிம்கள்) மதீனாவுக்கு வந்தபோது, தங்களுடைய கரங்களில் (செல்வம்) எதுவும் இல்லாத நிலையிலேயே வந்தனர். (மதீனாவாசிகளான) அன்சாரிகளோ நிலங்களும் (பேரீச்சந்தோப்புகள் போன்ற) அசையாச் சொத்துகளும் உடையவர்களாக இருந்தார்கள். எனவே, ஒவ்வோர் ஆண்டும் தம் நிலங்களின் விளைச்சல்களில் (குறிப்பிட்ட) பாகங்களை முஹாஜிர்கள் தமக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றும், தம் பங்கிற்கு அவர்கள் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றும் பேசி முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் தம் நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள், என் தாய்வழிச் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீதல்ஹாவின் தாயாராகவும் இருந்தார். என் தாயார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் அடிமைப் பெண்ணாயிருந்த உசாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாக)க் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர்வாசிகள்மீது போர் தொடுத்து முடித்து மதீனாவுக்கு (வெற்றியோடு) திரும்பியபோது முஹாஜிர்கள், தங்களுக்கு அன்சாரிகள் இரவலாக வழங்கியிருந்த கனிக(ள் தரும் மரங்க)ளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திரும்பத் தந்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக உம்மு அய்மன் (ரலி) அவர்களுக்குத் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உம்மு அய்மன் (ரலி) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் தாயார் ஆவார். அவர் (நபியவர்களின் தந்தை) அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிபின் அடிமையாக இருந்தார்; அபிசீனிய இனத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தந்தை இறந்த பிறகே ஆமினா அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்தார்கள். இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உம்மு அய்மன் அவர்களே வளர்த்துவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வளர்ந்து பெரியவரானதும் உம்மு அய்மனை விடுதலை செய்துவிட்டார்கள். பின்னர் (தமது பொறுப்பில் வளர்ந்த) ஸைத் பின் ஹாரிஸாவுக்கு அவரைத் திருமணம் செய்துவைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து ஐந்து மாதங்களுக்குப் பின்னர் உம்மு அய்மன் (ரலி) அவர்கள் இறந்தார்கள். இதுவே உம்மு அய்மன் (ரலி) அவர்களின் (வாழ்க்கையின்) சில குறிப்புகளாகும்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Jihad and Expeditions
- Hadith Index
- #4603
- Book Index
- 84
Grades
- -