ஹதீஸ்கள்
#4580
ஸஹீஹ் முஸ்லிம் - Jihad and Expeditions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் (அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு), (கலீஃபா) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா(விலிருந்த பனூ நளீர் குலத்தாரின்) சொத்து, "ஃபதக்" (ஃபைஉச்) சொத்து, கைபர் சொத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் எஞ்சியிருப்பது ஆகியவற்றில் தமக்குச் சேர வேண்டிய வாரிசுரிமையைக் கேட்டார்கள். அதற்கு (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தார் சாப்பிடுவார்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,)அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச்சென்ற இந்தச் சொத்தில் நான் சிறிதும் மாற்றம் செய்யமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எந்நிலையில் இந்தச் சொத்துகள் இருந்துவந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். இ(ந்தச் சொத்துகளைப் பங்கிடும் விஷயத்)தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்ட படியே நானும் செயல்படுவேன்" என்று கூறி, ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் (அவற்றில்) எதையும் ஒப்படைக்க மறுத்துவிட்டார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கோபித்துக்கொண்டு, இறக்கும்வரை அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பின் ஆறு மாதகாலம்தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்தபோது, அவர்களின் கணவர் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (இறப்பதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்துவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களுக்குக்கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை. அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு இறுதி (ஜனாஸா)த் தொழுகை தொழுவித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் வாழ்ந்தவரையில், அலீ (ரலி) அவர்கள்மீது மக்களுக்கு ஒரு தனிக்கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ (ரலி) அவர்கள் கண்டார்கள். எனவே, (கலீஃபா) அபூபக்ரிடம் சமரசம் பேசவும் வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்துகொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை. ஆகவே, "(கலீஃபா அவர்களே!) நீங்கள் மட்டும் எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வர வேண்டாம்"என்று கூறி அலீ (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூபக்ர் (ரலி) அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் வருவதை அலீ (ரலி) அவர்கள் விரும்பாததால்தான் அலீ (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.) (இச்செய்தி அறிந்த) உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மட்டும் தனியாக அவர்களிடம் செல்லாதீர்கள். (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்துவிடலாம்)"என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் சென்றே தீருவேன்" என்று கூறிவிட்டு, அவ்வாறே அவர்களிடம் சென்றார்கள். அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனை வாழ்த்தினார்கள். பிறகு, (அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி) "உங்கள் சிறப்பையும் உங்களுக்கு அல்லாஹ் வழங்கிய (பாக்கியத்)தையும் நாங்கள் அறிவோம். அல்லாஹ் உங்களிடம் ஒப்படைத்துள்ள இந்த (ஆட்சித்தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறாமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எங்களுக்குள்ள உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்) எங்களுக்கு ஓர் உரிமை உண்டு என நாங்கள் கருதிவந்தோம்" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பேசிக்கொண்டிருக்க, அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசத் துவங்கியபோது, "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களின் உறவைப் பேணுவதைவிட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இந்தச் செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையே ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நியாயமாக நடந்துகொள்வதில் சிறிதும் குறைவைக்கவில்லை. இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் செய்யாமல் நான் விட்டுவிடவுமில்லை" என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள் "தங்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுப்பதற்காக நான் நண்பகலுக்குப் பின் (கட்டாயம்) வருவேன்" என்று கூறினார்கள். (அன்று) அபூபக்ர் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகையை முடித்ததும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனை வாழ்த்திய பிறகு அலீ (ரலி) அவர்கள் குறித்தும், அவர் தமக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பின்னர் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் (எழுந்து), ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை வாழ்த்திய பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். "தாம் இவ்வாறு (ஆறு மாதம்) நடந்துகொள்ளக் காரணம்,அபூபக்ர் (ரலி) அவர்கள்மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்ததோ அல்ல. மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்குப் பங்கு உண்டு என (நபியின் குடும்பத்தாராகிய) நாங்கள் கருதிவந்ததேயாகும். ஆனால், (எங்களிடம் ஆலோசிக்காமல்) தன்னிச்சையாகச் செயல்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது" என்று கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ (ரலி) அவர்களைப் பார்த்து) "நீங்கள் சரியாகவே நடந்துகொண்டீர்கள்" என்று கூறினர். இயல்பு நிலைக்கு அலீ (ரலி) அவர்கள் திரும்பியபோது, முஸ்லிம்கள் அலீ (ரலி) அவர்களிடம் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Jihad and Expeditions
- Hadith Index
- #4580
- Book Index
- 61
Grades
- -