ஹதீஸ்கள்
#4224
ஸஹீஹ் முஸ்லிம் - Wills
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கைபரில் ("ஸம்ஃக்" எனும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அந்த நிலம் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததே இல்லை. ஆகவே, அதை நான் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை (அசலை) நீங்களே வைத்துக்கொண்டு, அதன் விளைச்சலை தர்மம் செய்துவிடுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் "அந்த நிலம் விற்கப்படக் கூடாது; வாங்கப்படவும் கூடாது; வாரிசுரிமையாக்கப்படாது;அன்பளிப்பாக வழங்கப்படக் கூடாது" என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். (அதன் வருமானத்தை) ஏழைகளுக்கும், (தம்) உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையி(ல் அறப்போர் புரிவோர் வகையி)லும், வழிப்போக்கருக்கும், விருந்தினர்களுக்கும் உரியதாக்கித் தர்மம் (வக்ஃப்) செய்தார்கள். அதைப் பராமரிக்கும் பொறுப்பேற்றிருப்பவர், (அதிலிருந்து எடுத்துத் தமக்கென்று) சேமித்து வைக்காமல் நியாயமான அளவில் உண்பதும் தம் தோழருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதிவைத்தார்கள்). அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸை நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். "(அதிலிருந்து எடுத்துத் தமக்கென்று) சேமித்து வைக்காமல்" எனும் இடத்தை நான் அடைந்ததும் "அதைத் தமது சொத்தாக ஆக்கிக் கொள்ளாமல்" என்று (திருத்திக்) கூறினார்கள். மேலும், இது தொடர்பாக எழுதப்பட்ட ஓர் ஆவணத்தை வாசித்த ஒருவர் "அதைத் தமது சொத்தாக ஆக்கிக்கொள்ளாமல் என்றே காணப்பட்டது" என்று கூறினார். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் இப்னு அபீஸாயிதா (ரஹ்) மற்றும் அஸ்ஹர் அஸ்ஸம்மான் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "(அதிலிருந்து எடுத்துத் தமக்கென்று) சேமித்து வைக்காமல் தம் தோழருக்கு உணவளிப்பதில்" என்பதோடு ஹதீஸ் முடிவடைகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை. இப்னு அபீஅதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள "இந்த ஹதீஸை நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் சொன்னேன்..." எனத் தொடங்கும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நான் கைபர் பகுதியில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று "நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிட மிக விருப்பமானதையோ, அதைவிட மிகச் சிறந்ததையோ நான் அடைந்து கொண்டதேயில்லை..." என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடருகின்றன. இந்த அறிவிப்பில், அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் இந்த ஹதீஸைச் சொன்னதைப் பற்றியும் அதற்குப் பின்னுள்ள தகவலும் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Wills
- Hadith Index
- #4224
- Book Index
- 21
Grades
- -