ஹதீஸ்கள்
#3758
ஸஹீஹ் முஸ்லிம் - Invoking Curses
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சாப அழைப்புப் பிரமாணம் (நடைமுறையில் வருவதற்கு முன் ஒரு முறை மனைவிமீது கணவன் விபசாரக்குற்றம் சாட்டுவது) தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆவேசமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச்சென்றார். (சிறிது நேரத்தில்) ஆஸிம் (ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள், "நான் (ஆவேசமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்" என்று சொன்னார்கள். பின்னர் ஆஸிம் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர் தம் மனைவியை எந்த நிலையில் கண்டார் என்பதைப் பற்றித் தெரிவித்தார்கள். (குற்றச்சாட்டைக் கொண்டுவந்த) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறமுடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானராகவும், படிந்த முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ மாநிறம் உடையவராகவும், அதிகச் சதைப்பிடிப்பு உள்ளவராகவும், கணைக்கால் புடைத்தவராகவும் இருந்தார். (இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைக் தருவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள். (இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்ட) அவையில் இருந்த ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை; (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்து கொண்டே தகாத உறவு கொண்டுவந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்)" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அதிகச் சதைப்பிடிப்பு உள்ளவராகவும்” என்பதற்குப் பின் "கடும் சுருள் முடியுடையவராகவும் இருந்தார்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Invoking Curses
- Hadith Index
- #3758
- Book Index
- 16
Grades
- -