ஹதீஸ்கள்
#3501
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போருக்குப் பின்) திஹ்யா அல் கல்பீ (ரலி) அவர்களது (போர்ச் செல்வத்தின்) பங்கில் ஸஃபிய்யா அவர்கள் போய்ச்சேர்ந்தார்கள். மக்கள் ஸஃபிய்யா அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாராட்டிப் பேசினர். "கைதிகளில் அவரைப் போன்று (அழகான) வேறெவரையும் நாங்கள் பார்க்கவில்லை" என்று (கூறி, அவரை மணந்துகொள்ளுமாறு) கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திஹ்யா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி (அவர்களை வர வழைத்து) ஸஃபிய்யாவுக்குப் பகரமாக திஹ்யா (ரலி) அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா அவர்களை என் தாயாரிடம் ஒப்படைத்து, "இவரை அலங்காரம் செய்க" என்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரிலிருந்து (மதீனா நோக்கிப்) புறப்பட்டார்கள். கைபரைக் கடந்துவந்ததும் (ஓரிடத்தில்) இறங்கி, ஸஃபிய்யாவுக்காகக் கூடாரம் அமைத்தார்கள். (அங்கு இரவில் தங்கினார்கள்.) விடிந்ததும், "உணவுப் பொருட்களில் ஏதேனும் எஞ்சியவற்றை வைத்திருப்பவர், அவற்றை நம்மிடம் கொண்டு வரவும்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர் தமது தேவைபோக எஞ்சிய பேரீச்சம் பழங்களையும் மாவையும் கொண்டுவந்தார். (மற்றவர்கள் அவரவரிடமிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தனர்.) அதில் "ஹைஸ்" பலகாரத்தின் ஒரு குவியலையே உருவாக்கி,அதிலிருந்து உண்ணத் தொடங்கினர். பிறகு அவர்களுக்கு அருகிலிருந்த மழை நீர் குட்டையிலிருந்து தண்ணீர் அருந்தினர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக அளித்த மண விருந்தாக (வலீமா) அமைந்தது. பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்து, மதீனாவின் சுவர்களைக் கண்டதும் அதற்காக நாங்கள் குதூகலித்தோம். நாங்கள் எங்கள் வாகனத்தை விரைவாகச் செலுத்தினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தமது வாகனத்தை விரைவாகச் செலுத்தினார்கள். அப்போது ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தார்கள். தமக்குப் பின்னால் (இருக்கையமைத்து) அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமரவைத்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒட்டகம் கால் இடறி விழுந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஒட்டகத்திலிருந்து விழுந்துவிட்டனர். மக்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையோ ஸஃபிய்யா (ரலி) அவர்களையோ பார்க்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாமே எழுந்து,ஸஃபிய்யா (ரலி) அவர்களை (திரையிட்டு) மறைத்தார்கள். பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நமக்கு எந்தப் பாதிப்பும் நேரவில்லை" என்றார்கள். பின்னர் நாங்கள் மதீனாவுக்குள் நுழைந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இளம் துணைவியர் புதுமணப்பெண்ணைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்தனர். அவர் கீழே விழுந்ததைக் குறித்து அகமகிழ்ந்தனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3501
- Book Index
- 104
Grades
- -