ஹதீஸ்கள்
#3429
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஒரு நாள்) மக்காவில் (சொற்பொழிவாற்ற) எழுந்து நின்று, "அல்லாஹ், மக்களில் சிலருடைய கண்களைக் குருடாக்கியதைப் போன்று அவர்களின் உள்ளங்களையும் குருடாக்கிவிட்டான்;அவர்கள் "அல்முத்ஆ" திருமணம் (தற்போதும்) செல்லும் எனத் தீர்ப்பளிக்கின்றனர்" என்று கூறி, ஒரு மனிதரைச் சாடையாக விமர்சித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை அந்த மனிதர் அழைத்து, "நீர் ஒரு விவரமற்ற முரடர்; என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது) காலத்தில் "அல்முத்ஆ" திருமணம் நடைமுறையில் இருந்தது" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "(அது அப்போதே மாற்றப்பட்டுவிட்டது என்பதை அறிந்து) உம்மை நீர் பக்குவப்படுத்திக்கொள்வீராக! (இந்த விவரம் தெரிந்த பின்பும்) அவ்வாறு நீர்("அல்முத்ஆ" திருமணம்) செய்தால், (அது விபசாரக் குற்றம் என்பதால்) உம்மைக் கல்லால் எறிந்து கொல்வேன்" என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடம் காலித் பின் அல்முஹாஜிர் பின் சைஃபில்லாஹ் (ரஹ்) அவர்கள், "நான் ஒரு மனிதருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவரிடம் ஒருவர் வந்து "அல் முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் குறித்துத் தீர்ப்புக் கேட்டார். அப்போது அந்த மனிதர் அதற்கு அனுமதியளித்தார். அப்போது (தீர்ப்பளித்த) அந்த மனிதரிடம் இப்னு அபீஅம்ரா அல்அன்சாரி (ரலி) அவர்கள், "நிதானி(த்துத் தீர்ப்பளி)ப்பீராக!" என்றார்கள். அதற்கு அவர், "அவ்வாறில்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (நபி (ஸல்) அவர்களது) காலத்தில் அது ("அல்முத்ஆ" திருமணம்) நடைபெற்றது" என்று கூறினார். அதற்கு இப்னு அபீஅம்ரா (ரலி) அவர்கள், "அல்முத்ஆ (தவணை முறைத்) திருமணம், இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவருக்கு மட்டும் செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி ஆகியவை அனுமதிக்கப்பட்டதைப் போன்று அனுமதிக்கப்பட்டிருந்தது.பிறகு அல்லாஹ் இந்த மார்க்கத்தை உறுதியாக்கியதும் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டான்" என்று கூறினார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறினார்கள் என அவர்களுடைய புதல்வர் ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு என்னிடம் தெரிவித்தார்கள்: நான் பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரு சிவப்புப் போர்வைகளைக் கொடுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்திருந்தேன். பின்னர், "அல்முத்ஆ" திருமணம் செய்யலாகாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள். தொடர்ந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது நான் அங்கு அமர்ந்திருந்தேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3429
- Book Index
- 32
Grades
- -