ஹதீஸ்கள்
#3321
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், "உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை செய்வதற்காகத் தேடி (அழைத்து)வாருங்கள். (நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்)" என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னை வாகனத்தில் தமக்குப் பின்னால் அமரவைத்துக்கொண்டு (கைபரை நோக்கிப்) புறப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழியில்) தங்கும்போதெல்லாம் அவர்களுக்கு நான் பணிவிடைகள் செய்து வந்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா நோக்கி) வந்துகொண்டிருந்தபோது, "உஹுத் மலை" அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்த மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்"என்று சொன்னார்கள். பிறகு பார்வையில் மதீனா பட்டபோது, "இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று, இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியைப் புனித (நகர)மாக நான் அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் (அளவைகளான) "முத்"து மற்றும் "ஸாஉ" ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அவற்றில் ("இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை" என்பதற்குப் பதிலாக) "இந்த இரு கருங்கல் மலைகளுக்கிடையே உள்ள பகுதியை" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3321
- Book Index
- 525
Grades
- -