ஹதீஸ்கள்
#3216
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
மூசா பின் சலமா அல்ஹுதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் சினான் பின் சலமா (ரஹ்) அவர்களும் உம்ராவிற்குச் சென்றோம். சினான் தம்முடன் ஒரு பலி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து)வந்தார். அந்த ஒட்டகம் வழியில் களைத்துப்போய் நின்றுவிட்டது. இது (இப்படியே) செல்ல இயலாமல் நின்றுவிட்டால், இதை எப்படி நான் கொண்டுசெல்வேன் என்று தெரியாமல் அவர் விழித்தார். மேலும், அவர் "நான் ஊர் சென்றதும் இதுதொடர்பாக விரிவாகக் கேட்டறிவேன்" என்று சொல்லிக்கொண்டார். இதற்கிடையில் முற்பகல் நேரம் ஆகிவிட்டது. நாங்கள் "அல்பத்ஹா" எனும் இடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது சினான் (ரஹ்) அவர்கள், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் இதைப்பற்றி நாம் பேசுவோம்" என்று கூறினார்கள். அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) தமது பலி ஒட்டகத்தின் நிலை பற்றிக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: விவரம் தெரிந்தவரிடம்தான் வந்துசேர்ந்திருக்கிறீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதினாறு பலி ஒட்டகங்களுடன் ஒரு மனிதரை (மக்காவிற்கு) அனுப்பி வைத்தார்கள். அவற்றைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தார்கள். அவர் (சிறிது தூரம்) சென்று விட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! பலி ஒட்டகங்களில் ஒன்று களைத்துப் போய் (பயணத்தைத் தொடர முடியாமல்) நின்றுவிட்டால், அதை நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்த இடத்திலேயே) அதை அறுத்துவிடுக; அதன் (கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள) செருப்புகளில் அதன் இரத்தத்தைத் தோய்த்து அதை அதன் விலாப்பகுதியில் பதித்துவிடுக. நீயோ உன் பயணக் குழுவினரில் எவருமோ அதை உண்ண வேண்டாம்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதினெட்டு பலி ஒட்டகங்களுடன் ஒரு மனிதரை அனுப்பிவைத்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேற்கண்ட ஹதீஸின் ஆரம்பத்திலுள்ள குறிப்புகள் அவற்றில் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3216
- Book Index
- 420
Grades
- -