ஹதீஸ்கள்
#2929
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். நாங்கள் மக்கா சென்றடைந்ததும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு, பலிப்பிராணியை (தம்முடன்) கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பலிப்பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொண்டனர். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் நான் இறையில்லத்தைச் சுற்றிவரவில்லை. (ஹஜ் முடிந்து) "அல்முஹஸ்ஸப்" எனுமிடத்தில் தங்கும் (துல்ஹஜ் பதினான்காவது) இரவு வந்தபோது, நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் அனைவரும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துத் திரும்புகின்றனர். நான் ஹஜ்ஜை மட்டுமே முடித்து விட்டுத் திரும்புகிறேனே?" என்றேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாம் மக்கா வந்தடைந்த இரவுகளில் நீ இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "அவ்வாறாயின், நீ உன் சகோதரர் (அப்துர் ரஹ்மான்) உடன் "தன்ஈமு"க்குச் சென்று அங்கிருந்து உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி (உம்ராவை நிறைவேற்றி)க்கொள். பிறகு இன்னின்ன இடத்தில் நாம் சந்திப்போம்" என்று கூறினார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியார்) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நான் உங்களைப் புறப்படவிடாமல் தடுத்துவிடுவேன் என எண்ணுகிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்லமாக), "உன் கழுத்தறுந்து போக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கொடுத்துவிட்டாயே!) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வரவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். (அப்படியானால்) பரவாயில்லை நீ புறப்படு!" என்றார்கள். (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக்கொண்டிருந்தபோது (உம்ராவை முடித்துத் திரும்பிய) என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் குன்றிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தேன். அல்லது அவர்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள்; நான் ஏறிக்கொண்டிருந்தேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #2929
- Book Index
- 138
Grades
- -