ஹதீஸ்கள்
#2854
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா ஒப்பந்தம் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். என் தோழர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை. "ஃகைகா" எனுமிடத்தில் எதிரிகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, (எதிரிகளை எதிர்கொள்ள) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முன்னே) சென்றார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் (சென்றுகொண்டு) இருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர். நான் கூர்ந்து கவனித்தபோது, ஒரு காட்டுக் கழுதை எனக்குத் தென்பட்டது. உடனே நான் அதை ஈட்டியால் தாக்கி (ஓடவிடாமல்) நிறுத்திவிட்டேன். என் தோழர்களிடம் உதவி கோரினேன். ("இஹ்ராம்" கட்டியிருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் இறைச்சியை நாங்கள் உண்டோம். இந்நிலையில் (எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோமோ என்று நாங்கள் அஞ்சினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடி எனது குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் (வழியில்) நான் "பனூ ஃகிஃபார்" குலத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீர் எங்கே சந்தித்தீர்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அவர்களை "தஅஹின்" எனும் நீர்நிலையருகே (சந்தித்து) விட்டுவந்தேன். அப்போது அவர்கள் "சுக்யா" எனும் சிற்றூரில் மதிய ஓய்வெடுக்கப் போய்க்கொண்டிருந்தார்கள்" என்று கூறினார். நான் அவர்களைச் சென்றடைந்து, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினர். பயணத்தில் உங்களைப் பிரிந்துவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சினர். (எனவே, அவர்கள் வந்துசேரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்" என்றேன். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காத்திருந்தார்கள். தொடர்ந்து நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒரு காட்டுக் கழுதையை) வேட்டையாடினேன். என்னிடம் அதில் சிறிதளவு எஞ்சியுள்ளது" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடனிருந்த) மக்களிடம், "உண்ணுங்கள்" என்றார்கள். அப்போது அம்மக்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். அத்தியாயம் :
وحدثنا صالح بن مسمار السلمي، حدثنا معاذ بن هشام، حدثني ابي، عن يحيى، بن ابي كثير حدثني عبد الله بن ابي قتادة، قال انطلق ابي مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية فاحرم اصحابه ولم يحرم وحدث رسول الله صلى الله عليه وسلم ان عدوا بغيقة فانطلق رسول الله صلى الله عليه وسلم - قال - فبينما انا مع اصحابه يضحك بعضهم الى بعض اذ نظرت فاذا انا بحمار وحش فحملت عليه فطعنته فاثبته فاستعنتهم فابوا ان يعينوني فاكلنا من لحمه وخشينا ان نقتطع فانطلقت اطلب رسول الله صلى الله عليه وسلم ارفع فرسي شاوا واسير شاوا فلقيت رجلا من بني غفار في جوف الليل فقلت اين لقيت رسول الله صلى الله عليه وسلم قال تركته بتعهن وهو قايل السقيا فلحقته فقلت يا رسول الله ان اصحابك يقرءون عليك السلام ورحمة الله وانهم قد خشوا ان يقتطعوا دونك انتظرهم . فانتظرهم فقلت يا رسول الله اني اصدت ومعي منه فاضلة فقال النبي صلى الله عليه وسلم للقوم " كلوا " . وهم محرمون
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #2854
- Book Index
- 64
Grades
- -
