ஹதீஸ்கள்
#2604
ஸஹீஹ் முஸ்லிம் - Fasting
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவெற்றி ஆண்டில் ரமளானில் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். "அல்கதீத்" எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். (பொதுவாக) நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் பிந்தியதை, அடுத்து பிந்தியதையே பின்பற்றுவார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாகச் சொன்னதையே கடைப்பிடிக்கப்படும்" எனக் கூறியவர் யார் என்று எனக்குத் தெரியாது என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், (பயணத்தில்) நோன்பை விடுவதே நபி (ஸல்) அவர்களின் இரு செயல்களில் இறுதியானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் இறுதியானது, அதற்கடுத்து இறுதியானது எதுவோ அதுவே எடுத்துக்கொள்ளப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த ஆண்டு) ரமளான் பதிமூன்றாம் நாள் காலையில் மக்காவில் இருந்தார்கள்" என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் பிந்தியதை, அடுத்து பிந்தியதையே பின்பற்றுவார்கள். பிந்தியது, முந்தியதைக் காலாவதியாக்கக்கூடியதும் இறுதி செய்யப்பட்டதுமாகும் என்று கருதுவார்கள்" என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். "உஸ்ஃபான்" எனும் இடத்தை அடைந்ததும் குடிநீருள்ள பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி, மக்கள் காண்பதற்காக பகல் நேரத்திலேயே அதை அருந்தி நோன்பை விட்டார்கள். இறுதியில் மக்காவிற்குள் நுழை(யும்வரை நோன்பு நோற்கமாலேயே இரு)ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். எனவே, (நோன்பு நோற்க) விரும்புகின்றவர் நோன்பு நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் விட்டுவிடவும் செய்யலாம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Fasting
- Hadith Index
- #2604
- Book Index
- 110
Grades
- -