ஹதீஸ்கள்
#2452
ஸஹீஹ் முஸ்லிம் - Zakat
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை யமனிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டார்கள்: உயைனா பின் ஹிஸ்ன் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல்கைல் (ரலி). நான்காமவர் அல்கமா பின் உலாஸா (ரலி); அல்லது ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி). அப்போது நபித்தோழர்களில் ஒருவர், "இதைப் பெறுவதற்கு இவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம்தாம்" என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ணமுள்ளன" என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த,அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?" என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்" என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், "எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை" என்று கூறினார்கள். பின்னர் திரும்பிச் சென்றுகொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து (சுவடே தெரியாமல்) வெளியேறிவிடுவார்கள்" என்று கூறினார்கள். "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று கூறியதாகவும் நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Zakat
- Hadith Index
- #2452
- Book Index
- 189
Grades
- -