ஹதீஸ்கள்
#2360
ஸஹீஹ் முஸ்லிம் - Zakat
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கஞ்சனின் நிலையோடு ஒப்பிடுகையில் தாராள மனத்துடன்)செலவு செய்கின்ற தர்மசீலரின் நிலையானது, மார்பிலிருந்து கழுத்தெலும்பு வரை (இரும்பாலான) "இரு நீளங்கிகள்" அல்லது "இரு கவசஆடைகள்" அணிந்துள்ள (இரு) மனிதரின் நிலையைப் போன்றதாகும். "(தாராள மனத்துடன்) செலவு செய்கின்றவர்" அல்லது "தர்மம் செய்கின்றவர்" தர்மம் செய்ய எண்ணும் போது அவரது கவசம் "விரிவடைந்து" அல்லது "(நீண்டு) சென்று" அவரது விரல் நுனிகளை மறைத்து (அதற்கப்பால்) அவரது பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்து விடுகிறது. (ஆனால்,) கஞ்சன் செலவு செய்ய எண்ணும்போது அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுகப்) பிடித்துவிடுகிறது. அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஞ்சனுக்கும் தர்மம் செய்கின்றவனுக்கும் பின்வருமாறு உதாரணம் கூறினார்கள்: அவ்விருவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்துள்ள இரு மனிதர்களின் நிலையை ஒத்திருக்கிறது. அவர்களின் கைகள் அவர்களுடைய மார்போடும் கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்கின்றவர் ஒன்றைத் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது கவசம் விரிந்து, அவரது விரல்நுனிகளை மறைத்து, பாதச்சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழிக்கத் தொடங்குகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும் போதெல்லாம் அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக்கிப்) பிடிக்கத் துவங்குகிறது. அவன் தனது கவசத்தை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்புத்தான் ஏற்படும்; ஏனெனில்,) அது விரியாது. இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இதைக் கூறியபோது) அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விரலால் தமது சட்டைக் கழுத்தை (நெருக்கி), (இவ்வாறு) சுட்டிக் காட்டினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Zakat
- Hadith Index
- #2360
- Book Index
- 97
Grades
- -