ஹதீஸ்கள்
#2305
ஸஹீஹ் முஸ்லிம் - Zakat
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் இரவு நேரத்தில் வெளியில் புறப்பட்டுச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்; அவர்களுடன் எந்த மனிதரும் இருக்க வில்லை. அவர்கள் தம்முடன் யாரும் வருவதை விரும்பவில்லை என்று நான் எண்ணிக் கொண்டேன். நிலா வெளிச்சம்படாத இடத்தில் நான் (அவர்களுக்குப் பின்னால்) நடக்கலானேன். அவர்கள் திரும்பி என்னைப் பார்த்துவிட்டு, "யார் இது?" என்று கேட்டார்கள். "(நான்) அபூதர், அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்" என்று பதிலளித்தேன். அவர்கள் "அபூதர்ரே, இங்கே வாருங்கள்" என்று அழைத்தார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள், "(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர் ஆவர். அல்லாஹ் தந்த நல்லதை (செல்வத்தை) அள்ளித் தமது வலப்பக்கமும் இடப்பக்கமும் முன்பக்கமும் பின்பக்கமும் வாரி இறைத்து, நன்மை புரிந்தவரைத் தவிர" என்று கூறினார்கள். பிறகு இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் "இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்" என்று கூறினார்கள். பாறைகள் சூழ்ந்த ஒரு வெட்டவெளியில் "நான் திரும்பி வரும்வரையில் இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்" என்று கூறி என்னை உட்கார வைத்தார்கள். பின்னர் (பாறைகள் நிறைந்த அந்த) "ஹர்ரா"ப் பகுதியில் நடந்து சென்றார்கள். அவர்களை நான் பார்க்க முடியாத இடத்திற்குச் சென்று நீண்ட நேரம் இருந்துவிட்டு, என்னை நோக்கி வந்தார்கள். அப்போது "அவன் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலும் சரியே!" என்று கூறிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். அவர்கள் (என் அருகில்) வந்ததும் என்னால் பொறுமையுடன் இருக்க முடியாமல், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! "ஹர்ரா"ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?" என்று கேட்டேன். அதற்கு "அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து "யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்" என்றார். உடனே நான் "ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளித்தார். நான் "அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் "ஆம்" என்றார். நான் "அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் "ஆம்;அவர் மது அருந்தினாலும் சரியே!" என்று கூறினார் என்றார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Zakat
- Hadith Index
- #2305
- Book Index
- 42
Grades
- -