ஹதீஸ்கள்
#2226
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Funerals
அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கைஸ் பின் சஅத் (ரலி), சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் (இராக் நாட்டிலுள்ள) "காதிசிய்யா" எனும் இடத்தில் இருந்தபோது, ஒரு பிரேத (ஊர்வல)ம் அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்து நின்றனர். அப்போது அவர்களிடம், "இது இந்த நாட்டு (முஸ்லிமல்லாத) பிரஜையின் பிரேதமாயிற்றே?" என்று கூறப்பட்டது. அதற்கு அவ்விருவரும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், "இது யூதரின் பிரேதம்" எனக் கூறப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது ஓர் (மனித) உயிரில்லையா?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்" என்றனர். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் கைஸ் பின் சஅத் (ரலி), சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. அதில் "அதற்கு அவர்கள் இருவரும் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு பிரேத (ஊர்வல)ம் எங்களைக் கடந்து சென்றது" என்று கூறியதாக ஹதீஸ் தொடர்கிறது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Funerals
- Hadith Index
- #2226
- Book Index
- 103
Grades
- -