ஹதீஸ்கள்
#1799
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Travellers
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) உறங்கினேன். அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்து, "திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன" எனும் (3:190ஆவது) வசனத்தை, அந்த அத்தியாயத்தின் இறுதிவரை ஓதி முடித்தார்கள். பின்னர் எழுந்து நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள்; ருகூஉச் செய்தார்கள்; சஜ்தாவும் செய்தார்கள். பிறகு திரும்பிச் சென்று குறட்டைவிட்டு உறங்கினார்கள். இவ்வாறே மூன்று முறை செய்து, ஆறு ரக்அத்கள் தொழுதார்கள். ஒவ்வொரு தடவையும் பல் துலக்கி, அங்கத்தூய்மை செய்து இந்த வசனங்களை ஓதினார்கள். பிறகு மூன்று ரக்அத் வித்ர் தொழுதார்கள். தொழுகை அறிவிப்பாளர் (சுப்ஹுத் தொழுகைக்காக) அறிவிப்புச் செய்ததும் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது "அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வஃபீ லிசானீ நூரன். வஜ்அல் ஃபீ சம்ஈ நூரன். வஜ்அல் ஃபீ பஸரீ நூரன். வஜ்அல் மின் கல்ஃபீ நூரன். வமின் அமாமீ நூரன். வஜ்அல் மின் ஃபவ்க்கீ நூரன். வமின் தஹ்த்தீ நூரன். அல்லாஹும்ம அஃத்தினீ நூரா" என்று கூறினார்கள். )பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. இறைவா! எனக்கு ஒளியை வழங்குவாயாக). அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Travellers
- Hadith Index
- #1799
- Book Index
- 227
Grades
- -