ஹதீஸ்கள்
#1129
ஸஹீஹ் முஸ்லிம் - Prayers
ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தோழர் ஒருவரும் ஒரு ஹதீஸ் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது (அங்கு வந்த) சாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்ற ஒரு ஹதீஸையும் அவர்களிடம் நான் கண்ட ஒரு நிகழ்ச்சியையும் உமக்குக் கூறுகிறேன்: நான் ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தன்று அபூசயீத் (ரலி) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மக்களில் யாரும் தமக்கு குறுக்கே சென்று விடாமலிருக்கத் தடுப்பொன்றை வைத்து அதை நோக்கித் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது பனூ அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் குறுக்கே கடந்துசெல்ல முற்பட்டார். உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் தமது கையால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்துசெல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் கண்ட அவர், மீண்டும் அவர்களைக் கடந்து செல்லப்பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்கள் முன்னைவிடக் கடுமையாக அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் அப்படியே நின்றுகொண்டு அபூசயீத் (ரலி) அவர்களைச் சாடினார். பிறகு மக்களை விலக்கிக்கொண்டு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று நடந்ததை அந்த இளைஞர் முறையிட்டார். அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள். அப்போது மர்வான், அபூசயீத் (ரலி) அவர்களிடம், உங்களுக்கும் உங்கள் சகோதரர் புதல்வருக்கும் (இடையே) என்ன நேர்ந்தது? அவர் உங்களைப் பற்றி முறையிடுகிறாரே! என்று கேட்டார். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், மக்களில் எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தமக்கு முன்னே ஒரு தடுப்பை வைத்துக்கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது, அவருக்கு முன்னால் குறுக்கே செல்ல யாரும் முற்பட்டால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளட்டும். அவர் (விலகிச் செல்ல) மறுக்கும்போது அவருடன் சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில், அவன்தான் ஷைத்தான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் (எனவே தான், அந்த இளைஞரை அவ்வாறு நான் தடுத்தேன்) என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayers
- Hadith Index
- #1129
- Book Index
- 291
Grades
- -