ஹதீஸ்கள்
#1119
ஸஹீஹ் முஸ்லிம் - Prayers
அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிலால் (ரலி) அவர்கள் (உள்ளே சென்று) நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரின் மிச்சத்தை வெளியே கொண்டுவந்தார்கள். மக்களில் சிலர் அதை (பிலால் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகப்) பெற்றுக்கொண்டனர். மற்றச் சிலர் அதைப் பெற்றவர்களிடமிருந்து பெற்று(த் தம்மீது தடவி)க்கொண்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்தவர்களாக வெளியே வந்தார்கள். (அதை அவர்கள் உயர்த்திப் பிடித்துக்கொண்டு வந்ததால் அவர்களின் கால்கள் வெளியில் தெரிந்தன.) இப்போதும் நான் நபி (ஸல்) அவர்களுடைய கால்களின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. பிறகு பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள் ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும்போது இங்கும் அங்குமாக (அதாவது, வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும்) திரும்பியபோது நான் அவர்களது வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களுக்காக (கைப்பிடி உள்ள) கைத்தடி ஒன்று (தடுப்பாக) நட்டுவைக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று லுஹர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அவர்களுக்கு முன்னால் (அந்தக் கைத்தடிக்கு அப்பால்) கழுதை, நாய் ஆகியன தடையின்றி கடந்து சென்றுகொண்டிருந்தன. பிறகு நபி (ஸல்) அவர்கள் அஸ்ரையும் இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பின்னர் மதீனாவிற்குத் திரும்பிச் செல்லும்வரை (கடமையான நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayers
- Hadith Index
- #1119
- Book Index
- 281
Grades
- -