ஹதீஸ்கள்
#1005
ஸஹீஹ் முஸ்லிம் - Prayers
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (நபியே!) இந்த வேதஅறிவிப்பை அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வேதஅறிவிப்பு (வஹீ) கொண்டு வரும்போது) நபி (ஸல்) அவர்கள் தம் இதழ்களை, (எங்கே இறைவசனங்கள் மறந்துவிடப் போகின்றனவோ என்ற அச்சத்தால் மனனமிடுவதற்காக) அசைத்துக்கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் சிரமத்தை அனுபவித்தார்கள். -இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இதழ்களை அசைத்ததைப் போன்று உங்களுக்கு நான் அசைத்துக் காட்டுகிறேன் என்று என்னிடம் கூறினார்கள். (அறிவிப்பாளர் மூசா பின் அபீஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் இதழ்களை அசைத்ததைப் போன்று நான் உங்களுக்கு அசைத்துக் காட்டுகிறேன் என்று சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு, (அவ்வாறே) அசைத்துக் காட்டினார்கள். தொடர்ந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (நபி (ஸல்) அவர்கள் தம் இதழ்களை அசைத்துக்கொண்டிருந்தபோது) அல்லாஹ் இந்த வேதஅறிவிப்பை அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக, உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் எனும் (75:16, 17) வசனங்களை அருளினான். அதாவது, உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படி செய்வதும் (எமது பொறுப்பாகும்) என்று இறைவன் கூறினான். மேலும், நாம் இதனை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள் எனும் (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது நாம் (வானவர் மூலம்) அருளும்போது, அதைக் கவனத்துடனும் அமைதியாகவும் கேளுங்கள். பின்னர் அதை உங்கள் நாவால் ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் என்று கூறினான். (இவ்வசனங்கள் அருளப்பெற்ற பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீ கொண்டு) வரும்போது நபி (ஸல்) அவர்கள் கவனத்துடன் கேட்பார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வசனங்களை அருளிவிட்டுச்) சென்றுவிடும்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதிக் காட்டியபடி அவற்றை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayers
- Hadith Index
- #1005
- Book Index
- 167
Grades
- -