ஹதீஸ்கள்
#479
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
மஅபத் பின் ஹிலால் அல்அனஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவாசிகளான) நாங்கள் (அபூஹம்ஸா) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களை நோக்கிப் புறப்பட்டோம். (பரிந்துரை குறித்த ஹதீஸை அன்னார் எங்களுக்கு அறிவிக்க) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களின் பரிந்துரையை நாடினோம். அனஸ் (ரலி) அவர்கள் "ளுஹா" தொழுது கொண்டிருக்கையில் நாங்கள் அங்கு போய்ச்சேர்ந்தோம். நாங்கள் உள்ளே நுழைய எங்களுக்காக ஸாபித் (ரஹ்) அவர்கள் அனுமதி கேட்டார்கள். பிறகு நாங்கள் உள்ளே நுழைந்தோம். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் தமது கட்டிலில் ஸாபித் (ரஹ்) அவர்களைத் தம்முடன் அமரவைத்துக்கொண்டார்கள். ஸாபித் (ரஹ்) அவர்கள், "அபூஹம்ஸா! பஸ்ராவைச் சேர்ந்த உங்கள் சகோதரர்கள் பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பான ஹதீஸைத் தமக்கு அறிவிக்குமாறு உங்களிடம் கோருகிறார்கள்" என்று சொன்னார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்: (பீதி நிறைந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அப்போது மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, "உங்கள் வழித்தோன்றல்களுக்காக நீங்கள் பரிந்துரை செய்யுங்கள்" என்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய்ப்பாருங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்வின் உற்ற நண்பர் ஆவார்" என்று கூறுவார்கள். உடனே மக்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ôôஹீம் (அலை) அவர்களும், "எனக்கு அந்தத் தகுதி இல்லை; நீங்கள் மூசா (அலை) அவர்களைப் போய்ப்பாருங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்விடம் உரையாடியவர் ஆவார்" என்று கூறுவார்கள். உடனே (பரிந்துரை பற்றிய மக்களின் கோரிக்கை) மூசா (அலை) அவர்களிடம் கொண்டு செல்லப்படும். மூசா (அலை) அவர்களும், "அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் ஈசா (அலை) அவர்களைப் போய்ப்பாருங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்" என்று சொல்வார்கள். உடனே (மக்களின் கோரிக்கை) ஈசா (அலை) அவர்களிடம் கொண்டுசெல்லப்படும். அப்போது ஈசா (அலை) அவர்களும் "எனக்கு அந்தத் தகுதி இல்லை; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை அணுகுங்கள்" என்று கூறுவார்கள். உடனே (மக்களின் கோரிக்கை) என்னிடம் கொண்டுவரப்படும். அப்போது "நான் அதற்குரியவனே" என்று நான் சொல்லிவிட்டுச் சென்று (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதி வழங்கப்படும். உடனே நான் இறைவனுக்கு முன்னால் நின்று தற்போது என்னால் சொல்லவியலாத புகழ்மொழிகளைக் கூறி அவனைப் போற்றுவேன்;அவற்றை அல்லாஹ்வே (அந்த நேரத்தில்) என் எண்ணத்தில் தோன்றச் செய்வான். பிறகு (அவனைக் காணும்போது) அவனுக்காகச் சிரம் பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்துவிடுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து) "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று சொல்லப்படும். அப்போது நான், "என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்" என்பேன். அப்போது, "செல்லுங்கள்; எவரது உள்ளத்தில் மணிக்கோதுமை அல்லது வாற்கோதுமையளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்" என்று கூறப்படும். ஆகவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு மீண்டும் என் இறைவனிடம் வந்து, அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் போற்றுவேன். பிறகு (அவனைக் காணும்போது) அவனுக்காகச் சிரம்பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்துவிடுவேன். அப்போதும், "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று கூறப்படும். அப்போதும் "என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்" என்பேன். அப்போது என்னிடம், "செல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றுங்கள்" என்று கூறப்படும். நான் சென்று அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் என் இறைவனிடம் திரும்பிவருவேன். அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றுவேன். பின்னர் அவனுக்காகச் சிரம்பணிந்து விழுவேன். அப்போதும் என்னிடம் "முஹம்மதே, எழுந்திருங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரையுங்கள்; ஏற்கப்படும்" என்று கூறப்படும். அதற்கு நான் "என் இறைவா, என் சமுதாயம்; என் சமுதாயம்" என்பேன். அப்போது "செல்லுங்கள்; எவரது உள்ளத்தில் கடுகுமணியை விட மிக மிகச் சிறியஅளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்" என என்னிடம் சொல்லப்படும். நானும் சென்று அவ்வாறே செய்வேன். இதுதான் அனஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த (பரிந்துரை பற்றிய) ஹதீஸாகும். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து (விடைபெற்றுப்) புறப்பட்டோம். நாங்கள் பாலைவன (மணல்)மேட்டுக்கு வந்தபோது, "நாம் ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்களைச் சந்தித்து சலாம் சொல்லிவிட்டு வந்தால் (நன்றாயிருக்கும்)" என்று பேசிக்கொண்டோம். அன்னார் (அமீர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிற்கு அஞ்சி) அபூகலீஃபா என்பவரின் இல்லத்தில் ஒளிந்திருந்தார்கள். அவ்வாறே நாங்கள் அவர்களிடம் சென்று சலாம் கூறினோம். மேலும், "அபூசயீத்! நாங்கள் உங்கள் சகோதரர் அபூஹம்ஸா (அனஸ்-ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ளோம். பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பாக அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸைப் போன்று வேறு யாரும் அறிவிக்க நாங்கள் கேட்டதில்லை" என்று கூறினோம். அதற்கு ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள், "எங்கே சொல்லுங்கள்!" என்றார்கள். அந்த ஹதீஸை நாங்கள் அவர்களிடம் சொன்னோம். அப்போது அவர்கள் "இன்னும் சொல்லுங்கள்!" என்றார்கள். அதற்கு நாங்கள், "இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் (ரலி) அவர்கள் கூறவில்லை" என்றோம். அதற்கு ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நினைவாற்றலும் உடல்பலமும் மிக்கவராக இருந்தபோது இந்த ஹதீஸை (இன்னும் விரிவாக) எமக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அதில் சிலவற்றை இப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறாமல் விட்டுள்ளார்கள். முதியவரான அன்னார் அதை மறந்துவிட்டார்களா? அல்லது (நபிகளாரின் பரிந்துரை மீது அபரிமிதமான) நம்பிக்கை வைத்துக்கொண்டு (நல்லறங்களில் நாட்டமில்லாமல்) நீங்கள் இருந்து விடுவீர்கள் என்று அஞ்சினார்களா என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். நாங்கள் ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்களிடம், "(அந்தக் கூடுதல் செய்தியை) எங்களுக்குச் சொல்லுங்கள்!" என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹசன் (ரஹ்) அவர்கள் சிரித்துவிட்டு, "மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். இந்த நபிமொழியை உங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே உங்களிடம் நான் இவ்வாறு குறிப்பிட்டேன்" என்று (சொல்லிவிட்டு, அந்தக் கூடுதல் செய்தியையும்) கூறினார்கள். (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) பிறகு நான்காம் முறையும் நான் என் இறைவனிடம் திரும்பிச்சென்று அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் போற்றுவேன். பிறகு அவனுக்காகச் சிரம்பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்துவிடுவேன். அப்போது, "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று கூறப்படும். அப்போது நான், "என் இறைவா! "லா இலாஹ இல்லல்லாஹ்" மொழிந்தவர்கள் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக!" என்று கேட்பேன். அதற்கு இறைவன், "அந்த உரிமை உங்களுக்கில்லை" அல்லது "அந்தப் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை". மாறாக, என் வல்லமையின் மீதும், பெருமையின் மீதும், மகத்துவத்தின் மீதும், அதிகாரத்தின் மீதும் ஆணையாக! "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சொன்னவரை நிச்சயமாக நானே (நரகத்திலிருந்து) வெளியேற்றுவேன்" என்று கூறுவான். அறிவிப்பாளர் மஅபத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: "ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை எங்களுக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்" என்று நான் அறுதியிட்டுக் கூறுகிறேன். மேலும், ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள், "இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அனஸ் (ரலி) அவர்கள் நினைவாற்றலும் உடல் பலமும் மிக்கவராக இருந்தார்கள். (அப்போது இந்த ஹதீஸை அறிவித்தார்கள்)" என்றும் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #479
- Book Index
- 385
Grades
- -