ஹதீஸ்கள்
#387
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
ஸாலிஹ் பின் ஸாலிஹ் அல்ஹம்தானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அன்றைய) குராசான் நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர் ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்களிடம், "அபூஅம்ரே! "ஒருவர் தம் அடிமைப் பெண்ணை விடுதலை செய்து அவளைத் தாமே மணந்துகொள்ளும்போது, அவர் தமது ஒட்டகத்திலேயே பயணம் செய்து கொண்டிருப்பவரைப் போன்றவராகிறார் (அவருக்கு அதற்காக நன்மை ஏதும் கிடைக்காது)" என எங்கள் குராசான் பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனரே!?" என்று கேட்டார். அதற்கு ஷஅபீ (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமுசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத்தில்) இரட்டை நன்மைகள் அளிக்கப்படும்: 1.வேதக்காரர்களில் ஒருவர் தம்முடைய (சமூகத்தாருக்கு நியமிக்கப்பெற்ற) இறைத்தூதரையும் நம்பினார்; எனது காலத்தை அவர் அடைந்தபோது என்னையும் நம்பினார்; பின்பற்றினார்; மெய்ப்படுத்தினார். அவருக்கு இரு நன்மைகள் உண்டு. 2.அடிமையாக உள்ள ஒருவர் இறைவனின் கடமையையும் நிறைவேற்றி, தன் எசமானின் கடமையையும் நிறைவேற்றினார். அவருக்கும் இரு நன்மைகள் உண்டு. 3.ஒருவர் தம்மிடமிருந்த அடிமைப் பெண்ணுக்கு நிறைவாக உணவளித்(துப் பராமரித்து வந்)தார். அவளுக்கு நற்குணங்களைக் கற்றுக்கொடுத்தார். அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்து தாமே மணந்தும்கொண்டார் எனில், அவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு. பிறகு ஷஅபீ (ரஹ்) அவர்கள் அந்தக் குராசான்வாசியிடம், "(கட்டணம்) ஏதுமின்றி (உங்களுக்கு நான் அறிவித்த) இந்த ஹதீஸைப் பெற்றுக்கொள்ளுங்கள். இதைவிடச் சிறிய விஷயங்களை அறிந்துகொள்வதற்காகவெல்லாம் சிலர் மதீனா வரை பயணம் சென்றதுண்டு" என்றார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #387
- Book Index
- 293
Grades
- -