ஹதீஸ்கள்
#306
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபரில்) சந்தித்துப் போரிட்டனர். (ஒருநாள் போர் முடிந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் படையினரிடமும், எதிர் அணியினர் தம் படையினரிடமும் திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ("குஸ்மான்" என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் இருந்தார். அவர் (எதிரிகளின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (மற்றும் பிரிந்து செல்லாத) எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தமது வாளால் வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார். "இன்று இவரைப் போன்று நம்மில் வேறு யாரும் தேவையான அளவிற்கு (நிறைவாகப்) போரிடவில்லை" என்று மக்கள் பேசிக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று (அந்த வீரரைப் பற்றிக்) கூறினார்கள். உடனே மக்களில் ஒருவர், "நான் அவருடன் தொடர்ந்து செல்லப் போகிறேன்" என்று கூறிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அந்த வீரர் நிற்கும்போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்துசென்றால் அவருடன் இவரும் விரைந்துசென்றார். இந்நிலையில் அவ்வீரர் (போரில்) கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி தனது வாளின் கீழ்முனையை பூமியில் (நட்டு) வைத்து, அதன் (கூரான) மேல் முனையைத் தன் மார்புகளுக்கிடையே வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை சாய்த்துக்கொண்டு தன்னை மாய்த்துக்கொண்டார். (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதிகூறுகின்றேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே, நான் "அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு" என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடிப் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்துப் பின்தொடர்ந்தேன்.) அவர் (ஒரு கட்டத்தில் எதிரிகளால்) மிகக் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி, தனது வாளின் கீழ்முனையை பூமியில் (நட்டு) வைத்து அதன் மேல் முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது சாய்த்துக்கொண்டு தன்னையே மாய்த்துக்கொண்டார்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். அவ்வாறே ஒரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #306
- Book Index
- 213
Grades
- -