ஹதீஸ்கள்
#279
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது காலத்தில் நடந்த சண்டையின் போது ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அஸ்அஸ் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் "எனக்காக உங்களுடைய சகோதரர்களில் சிலரை ஒன்றுகூட்டுங்கள். அவர்களிடம் நான் பேச வேண்டும்" என்று சொல்லி அனுப்பினார்கள். (தம் சகோதரர்களை அழைத்து வருமாறு) அஸ்அஸ் ஒரு தூதுவரை அவர்களிடம் அனுப்பினார். அவ்வாறே அவர்கள் ஒன்றுகூடியதும் (அவர்களிடம்) மஞ்சள் நிற முக்காட்டு ஆடை ஒன்றை அணிந்து கொண்டு ஜுன்தப் (ரலி) அவர்கள் வந்து "நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை (தொடர்ந்து) பேசுங்கள்" என்று சொன்னார்கள். அதையடுத்து அவர்கள் ஒவ்வொருவராக பேசிக்கொண்டே வந்து ஜுன்தப் (ரலி) அவர்கள் பேச வேண்டிய முறை வந்தபோது அவர்கள் தமது தலையிலிருந்த முக்காட்டை விலக்கிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: நான் உங்களிடம் வரும்போது உங்களுக்கு உங்களுடைய நபியின் செய்தி ஒன்றை அறிவிக்க வேண்டும் என நான் எண்ணியிருக்கவில்லை. (ஆனால், அறிவிக்க வேண்டுமென இப்போது விரும்புகிறேன்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களில் ஒரு கூட்டத்தாரை நோக்கி முஸ்லிம்களின் படைப் பிரிவொன்றை அனுப்பிவைத்தார்கள். அவர்கள் (அக்கூட்டத்தாரிடம் சென்று) அவர்களை(ப் போர்க்களத்தில்) சந்தித்தனர். அப்போது இணைவைப்பாளர்களில் ஒரு மனிதர் முஸ்லிம்களில் எவரையேனும் தாக்க முற்படும்போதெல்லாம் (குறி தவறாமல்) தாக்கிக் கொலை செய்துகொண்டிந்தார். இந்நிலையில் முஸ்லிம்களில் ஒருவர் (அவர் உசாமா பின் ஸைத் என்றே நாங்கள் பேசிக்கொண்டதுண்டு) அந்த எதிரி அயர்ந்துபோகும் நேரத்திற்காகக் காத்திருந்தார். (அந்த நேரமும் வந்தது.) அந்த மனிதர்மீது இவர் வாளை உயர்த்தியபோது அவர் (தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக) "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ உறுதிமொழியை) கூறினார். ஆனால் (அதைப் பொருட்படுத்தாமல்) உசாமா (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கொன்றுவிட்டார்கள். (அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.) அந்த வெற்றியை அறிவிப்பதற்காக ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் அந்தப் போரின் நிலவரம் குறித்து விசாரித்தார்கள். அப்போது அவர் நடந்த நிகழ்ச்சிகளையும் (கொல்லப்பட்ட) அந்த மனிதர் நடந்துகொண்ட விதம் பற்றியும் தெரிவித்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் உசாமா (ரலி) அவர்களை வரவழைத்து அவர்களிடம் "ஏன் அவரைக் கொன்றாய்?" என்று கேட்டார்கள். உசாமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதர் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தினார்.இன்னார் இன்னாரை அவர் கொன்றுவிட்டார் (சிலருடைய பெயரை உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டார்கள்) ஆகவே, நான் அவரைத் தாக்கினேன். அவர் வாளைக் கண்டதும் (பயந்துபோய்) "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ உறுதிமொழி) கூறினார்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை நீ கொன்றுவிட்டாயா?" என்று கேட்டார்கள். உசாமா, "ஆம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர் ஏற்றுக்கொண்ட ஏகத்துவ உறுதிமொழியான) "லா இலாஹ இல்லல்லாஹ்" மறுமை நாளில் (உனக்கெதிரான சாட்சியாக) வரும்போது நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார்கள். இதைவிட அதிகமாக வேறெதையும் கேட்காமல், "லா இலாஹா இல்லல்லாஹ்" மறுமை நாளில் வரும் போது நீ என்ன செய்யப்போகிறாய்?" என்றே (திரும்பத் திரும்ப) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #279
- Book Index
- 185
Grades
- -