ஹதீஸ்கள்
#115
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் "ரபீஆ" கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம். (உங்களைச் சந்திக்கவிடாமல்) உங்களுக்கும் எங்களுக்குமிடையே "முளர்" குலத்து இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வர முடியும்.ஆகவே, எங்களுக்குச் சில கட்டளைகளை அளியுங்கள். அவற்றை நாங்களும் கடைப்பிடித்து, எங்களுக்குப் பின்னால் (எங்கள் ஊரில்) இருப்பவர்களையும் அவற்றைக் கடைப்பிடித்து நடக்கும்படி அழைப்போம்" என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு விஷயங்களை (செயல்படுத்தும்படி) உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன். (கட்டளையிடும் நான்கு விஷயங்கள்:) 1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது. (பிறகு அதை மக்களுக்கு விவரித்துக் கூறும் முகமாக பின்வருமாறு கூறினார்கள்:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதிகூறுவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்திலொரு பங்கை (அரசு பொதுநிதிக்கு)ச் செலுத்துவது (ஆகியவைதாம் அவை). (மது ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய்க் குடுவை, மண் சாடி, (பேரீச்ச மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப்பீப்பாய், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது. அவற்றில், கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை"என்று கூறி, (அந்த நான்கில்) "ஒன்று" என (தமது விரலை) மடித்துக் காட்டினார்கள் என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا خلف بن هشام، حدثنا حماد بن زيد، عن ابي جمرة، قال سمعت ابن عباس، ح وحدثنا يحيى بن يحيى، - واللفظ له - اخبرنا عباد بن عباد، عن ابي جمرة، عن ابن عباس، قال قدم وفد عبد القيس على رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله انا هذا الحى من ربيعة وقد حالت بيننا وبينك كفار مضر فلا نخلص اليك الا في شهر الحرام فمرنا بامر نعمل به وندعو اليه من وراءنا . قال " امركم باربع وانهاكم عن اربع الايمان بالله - ثم فسرها لهم فقال - شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله واقام الصلاة وايتاء الزكاة وان تودوا خمس ما غنمتم وانهاكم عن الدباء والحنتم والنقير والمقير " . زاد خلف في روايته " شهادة ان لا اله الا الله " . وعقد واحدة
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #115
- Book Index
- 23
Grades
- -
