ஹதீஸ்கள்
#7510
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
மஅபத் பின் ஹிலால் அல்அனஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்றுகூடினோம். பிறகு நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ் (ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றோம். அனஸ் (ரலி) அவர்கள் தமது கோட்டையில் ‘ளுஹா’ தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தமது விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், “பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்” என்று சொன்னோம். உடனே ஸாபித் (ரஹ்) அவர்கள், “அபூஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்: (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்” என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய்ப் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பர் ஆவார்” என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும், “அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் மூசாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவர் ஆவார்” என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூசா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய்ப்பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்” என்று சொல்வார்கள். உடனே மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய்ப்பாருங்கள்” என்று சொல்வார்கள். உடனே மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், “நான் அதற்குரிய வன்தான்” என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் எனது எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக் காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்பேன். அப்போது, “செல்லுங்கள்; எவரது உள்ளத்தில் தொலி நீக்கப் படாத கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்” என்று சொல்லப்படும். ஆகவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ் மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று கூறப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்று சொல்வேன். அப்போது “செல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் ‘அணுவளவு’ அல்லது ‘கடுகளவு’ இறைநம்பிக்கை இருந்ததோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்” என்பேன். அதற்கு அவன், “செல்லுங்கள்: எவரது உள்ளத்தில் கடுகு மணியைவிட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.) அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் விடைபெற்றபோது நான் என் நண்பர்கள் சிலரிடம், “(ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடமிருந்து தப்புவதற்காக) அபூகலீஃபாவின் இல்லத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் ஹசன் அல்பளி (ரஹ்) அவர்களை நாம் கடந்து சென்றால், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நமக்கு அறிவித்த (பரிந்துரை பற்றிய விஷயத்)தை அவர்களிடம் கூறினால் நன்றாயிருக்கும்!” என்று சொன்னேன். அவ்வாறே நாங்கள் ஹசன் (ரஹ்) அவர்களிடம் சென்று (அனுமதி கேட்கும் முகமாக) சலாம் (முகமன்) சொன்னோம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தார்கள். நாங்கள் அவரிடம், “அபூசயீதே! உங்கள் சகோதரர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். பரிந்துரை பற்றி அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்று (வேறு யாரும் சொல்ல) நாங்கள் கண்டதில்லை” என்று கூறினோம். அதற்கு ஹசன் (ரஹ்) அவர்கள், “அதை என்னிடம் கூறுங்கள்” என்றார்கள். அந்த நபிமொழியை நாங்கள் அவர்களிடம் சொல்óக்கொண்டே இந்த இடம் (மூன்றாவது முறை பரிந்துரை செய்ய அனுமதிகோரி நான் என் இறைவனிடம் சென்றேன் என்பது)வரை வந்தபோது ஹசன் (ரஹ்) அவர்கள், “இன்னும் சொல்லுங்கள்” என்றார்கள். அதற்கு நாங்கள் “இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் அவர்கள் கூறவில்லை” என்று சொன்னோம். அதற்கு ஹசன் (ரஹ்) அவர்கள், “இருபது ஆண்டுகளுக்கு முன்னால் (நினைவாற்றல் மாறாத) இளமையில் அனஸ் இருந்தபோது (இந்த நபிமொழியை இன்னும் விரிவாக) எனக்கு அறிவித்தார்கள். (அந்தக் கூடுதலான விஷயத்தைக் கூற) அவர்கள் மறந்துவிட்டார்களா? அல்லது நீங்கள் (நபிகளாரின் பரிந்துரைமீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துக் கொண்டு நல்லறங்களில்) நாட்டமில்லாமல் இருந்துவிடுவீர்கள் என்பதால் கூறவில் லையா என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார்கள். உடனே நாங்கள், “அபூசயீதே! அவ்வாறாயின் அதை நீங்கள் எங்களுக் குச் சொல்லுங்கள்!” என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹசன் (ரஹ்) அவர்கள் சிரித்துவிட்டு, “அவசரக்கார னாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். என்னிடம் அனஸ் (ரலி) அவர்கள் எப்படி இந்த நபிமொழியைக் கூறினார்களோ அதைப் போன்றே உங்களிடம் நான் அந்த நபிமொழியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு குறிப்பிட்டேன்” என்று (சொல்லிவிட்டு, அந்த நபிமொழியின் கூடுதல் விஷயத்தையும்) கூறினார்கள். (நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:) பிறகு, நான்காம் தடவையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலை களைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னவர்கள் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக” என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்” என்று சொல்வான்.151 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7510
- Book Index
- 135
Grades
- -