ஹதீஸ்கள்
#7478
ஸஹீஹ் அல்-புகாரீ - Oneness, Uniqueness of Allah (Tawheed)
உபைதுல்லாஹ் பின் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘மூசா (அலை) (அவர்கள் கல்வி கற்பதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களுடைய அந்தத் தோழர் யார்? அவர் ‘களிர்’ அவர்கள்தானா?’ என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் அல் ஃபஸாரிய்யு என்பாரும் கருத்து வேறுபாடு கொண்டு தர்க்கித்துக்கொண்டார்கள். அப்போது உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, “நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் எவரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாகத் தர்க்கித்துக் கொண்டோம். அவரது நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று வினவினார்கள். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித் தார்கள்: ஆம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்: இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருந்தபோது ஒரு மனிதர் வந்து “உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, மூசா (அலை) அவர்கள், “இல்லை (என்னைவிட அறிந்தவர் எவரும் இருப்பதாகத் தெரிய வில்லை)” என்று சொன்னார்கள். உடனே மூசா (அலை) அவர்களுக்கு, “இருக்கிறார். அவர்தான் நம் அடியார் ‘களிர்’ ஆவார்” என்று வஹீ அறிவிக்கப்பட்டது. அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் அவர்களைச் சந்திக்கச் செல்லும் வழியைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ் மீன் ஒன்றை அவர்களுக்கு அடையாளமாக ஆக்கினான். அவர்களிடம், “நீங்கள் எந்த இடத்தில் மீனைத் தொலைக்கிறீர்களோ அந்த இடத்திலிருந்து (வந்த வழியே) திரும்பச் செல்லுங்கள். அங்கு களிர் அவர்களைச் சந்திப்பீர்கள்” என்று கூறப்பட்டது. அவ்வாறே மூசா (அலை) அவர்கள் கடலில் மீனின் சுவட்டைப் பின்பற்றியபடியே சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களுடைய பணியாள் மூசா (அலை) அவர்களிடம், “நாம் அந்தப் பாறையின் பக்கம் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்துவிட்டேன். அதை (உங்களுக்கு)க் கூறவிடாமல் ஷைத்தான்தான் எனக்கு மறதியைத் தந்துவிட்டான்; அது (அவ்விடத்தில் கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தனது வழியை அமைத்துக்கொண்டது” என்று சொன்னார். மூசா (அலை) அவர்கள், “அதுதான் நாம் தேடி வந்த இடம்” என்று சொல்ல, இருவருமாகத் தாம் வந்த வழியை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள் (18:63-65). பிறகு அவ்விருவர் தொடர்பாக அல்லாஹ் எடுத்துரைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.120 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oneness, Uniqueness of Allah (Tawheed)
- Hadith Index
- #7478
- Book Index
- 104
Grades
- -