ஹதீஸ்கள்
#7305
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மாலிக் பின் அவ்ஸ் அந்நளி (ரஹ்) அவர்களிடம் சென்று (ஃபதக் சம்பவம் பற்றிக்) கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்களின் மெய்க் காவலர் ‘யர்ஃபஉ’ என்பவர் அவர்களிடம் வந்து, “உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல் அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க) அனுமதி கோருகின்றனர்; தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள், “ஆம் (வரச் சொல்லுங்கள்)” என்று கூறினார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து முகமன் (சலாம்) கூறி அமர்ந்தனர். அப்போது (மீண்டும்) யர்ஃபஉ (வந்து), “அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் சந்திப்பதில் தங்களுக்கு இசைவு உண்டா?” என்று கேட்டார். அவர்கள் இருவருக்கும் அனுமதி அளித்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் (என்னுடைய) இந்த அக்கிரமக்கார(ப் பங்காள)ருக்கும் இடையே (இந்தச் சொத்து தொடர்பாக) தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அவர்கள் இருவரும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்திக்கொண்டனர். அப்போது (அங்கிருந்த) உஸ்மான் (ரலி) அவர்களும் அவர்தம் தோழர்களும் கொண்ட அந்தக் குழுவினர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இவர்களுக்கிடையே தீர்ப்பளித்து ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள்” என்று கூறினர். உமர் (ரலி) அவர்கள், “சற்று பொறுங்கள். வானமும் பூமியும் எந்த அல்லாஹ்வின் கட்டளையால் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கின்றேன்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே’ என்று தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், “(ஆம்) நபியவர்கள் அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்” என்று பதிலளித்தனர். உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, “அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கின்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவ்விருவரும், “ஆம் (அவ்வாறு சொல்óயிருக்கிறார்கள்)” என்று பதிலளித்தனர். உமர் ரலி அவர்கள், “அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன்: “(போரிடாமல் கிடைத்த) இந்த (‘ஃபய்உ’)ச் செல்வத்திலிருந்து சிறிதளவைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கினான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை வழங்கவில்லை” என்று கூறிவிட்டு, “அல்லாஹ் எந்தச் செல்வத்தை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போர் புரிவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததன்று” எனும் (59:6ஆவது) வசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து “எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக்கொள்ளவில்லை; அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. அதை உங்களுக்கே கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் அதிலிருந்து இந்தச் செல்வம் மட்டுமே எஞ்சியது. நபி (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு எஞ்சியதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள். (இவ்வளவும் சொல்லிவிட்டு,) “அல்லாஹ்வின் பொருட்டால் உங்களைக் கேட்கின் றேன்: நீங்கள் இதை அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்”ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தார்கள். பிறகு, அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும், “உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நீங்கள் இதை அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும், “ஆம் (அறிவோம்)” என்று பதிலளித்தனர். (தொடர்ந்து,) “பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக்கொண்டான். அப்போது (‘கலீஃபா’ பொறுப்பேற்ற) அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்” என்று கூறி அ(ந்தச் செல்வத்)தைத் தமது கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் -அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கிச் சொல்கிறார்கள்- “அபூபக்ர் அந்தச் செல்வத்தில் இன்னின்னவாறு செயல்படுகிறார்” என்று கூறினீர்கள். அல்லாஹ் அறிவான்: அபூபக்ர் (ரலி) அவர்கள் அது விஷயத்தில் உண்மையே சொன்னார்கள்; நல்லதே செய்தார்கள்; நேரான முறையில் நடந்து சத்தியத்தையே பின்பற்றினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது (கலீஃபா பொறுப்பேற்ற) நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்” என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தை இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டேன். அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்துகொண்ட முறைப்படி நானும் செயல்பட்டுவந்தேன். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் வந்தீர்கள்; உங்கள் இருவரின் பேச்சும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. நீங்கள் இருவரும் ஒன்றுபட்டே இருந்தீர் கள். (அப்பாஸே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரரின் புதல்வர் (அதாவது நபி (ஸல்) அவர்கள்) இடமிருந்து உங்களுக் குச் சேர வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள். இவரும் (அலீயும்) தம் துணைவியாருக்கு அவருடைய தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கைக் கோரியபடி என்னிடம் வந்தார். அதற்கு நான் (உங்கள் இருவரிடமும்,) ‘நீங்கள் இருவரும் விரும்பினால், அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் (ரலி) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் அதைக் கொடுத்துவிடுகிறேன்; அவ்வாறில்லையாயின், இது விஷயத்தில் நீங்கள் இருவரும் என்னிடம் பேசவேண்டாம்’ என்று நான் சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும், ‘எங்களிடம் அதைக் கொடுத்துவிடுங்கள்; அந்த நிபந்தனைகள்படியே (நாங்கள் செயல்படுகிறோம்)’ என்று சொன்னீர்கள். அதனடிப்படையிலேயே உங்கள் இருவரிடமும் நான் அதைக் கொடுத்தேன்” என்று சொன்னார்கள். பிறகு (குழுவினரை நோக்கி) “நான் உங்களிடம் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நான் இவ்விருவரிடமும் அந்த நிபந்தனையின்படி அந்தச் சொத்தை கொடுத்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். அந்தக் குழுவினர், “ஆம்; (அவ்வாறு கொடுக்கவே செய்தீர்கள்)” என்று கூறினர். பிறகு அலீ (ரலி) மற்றும் அப்பாஸ் (ரலி) ஆகியோரை நோக்கி, “நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன்: நான் உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின் படியே கொடுத்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். இருவரும் ‘ஆம்’ என்றார் கள். உமர் (ரலி) அவர்கள், “இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிட மிருந்து கோருகின்றீர்களா? எவனது அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன்மீது சத்தியமாக! நான் மறுமை வரும்வரை இந்த விஷயத் தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் அளிக்கமாட்டேன்! உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். உங்களுக்குப் பதிலாக நானே அதைப் பராமரித்துக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.33 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7305
- Book Index
- 36
Grades
- -