ஹதீஸ்கள்
#7261
ஸஹீஹ் அல்-புகாரீ - Accepting Information Given by a Truthful Person
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அகழ்ப் போர் நாளில் (எதிரிகளை வேவு பார்க்கச் செல்வதற்காக) மக்களை அழைத்தார்கள். ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் முன்வந்தார்கள். பிறகும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்களே மீண்டும் முன்வந்தார்கள். பிறகு மீண்டும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்களே (மறுபடியும்) முன்வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைத்தூதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு உதவியாளர் ஒருவர் உண்டு. என்னுடைய சிறப்பு உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று சொன்னார்கள்.18 (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை இப்னுல் முன்கதிர் (ரஹ்) அவர்களிடமிருந்து மனனம் செய்தேன். அன்னாரிடம் அய்யூப் (ரஹ்) அவர்கள், “அபூபக்ரே! இவர்களுக்கு ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸ்களை அறிவியுங்கள்; ஏனெனில் ஜாபிரிடமிருந்து நீங்கள் ஹதீஸ் அறிவிப்பது இவர்களைப் பரவசப்படுத்தும்” என்று கூறினார்கள். உடனே அதே இடத்தில், “நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் செவியுற்றேன்; ஜாபிர் (ரலி) அவர்களிடம் செவியுற்றேன்” என்று கூறி தொடர்ந்து பல ஹதீஸ்களை அன்னார் அறிவித்தார்கள். (மற்றோர் அறிவிப்பாளரான) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் “ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் ‘குறைழா போர் நாளில்’ என்று கூறியுள்ளார்களே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “நீங்கள் அமர்ந்துள்ளபடியே இப்னுல் முன்கதிர் அமர்ந்திருந்தபோது அன்னார் ‘அகழ்ப் போர் நாளில்’ என்று கூறியதை நான் (நன்கு) நினைவில் வைத்துள்ளேன்” என்றார்கள். மேலும், சுஃப்யான் (ரஹ்) அவர்கள் “இரண்டும் ஒரே நாள்தானே!” என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Accepting Information Given by a Truthful Person
- Hadith Index
- #7261
- Book Index
- 15
Grades
- -